‘அலங்கு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தின் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.
விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “அனைருக்கும் மாலை வணக்கம். இயக்குநர் சக்தி வந்து என்னை அழைத்தார். நான் “உடனே வருகிறேன்” என்று கூறினேன். இயக்குநர் சக்தி என்னுடைய ‘அஞ்சாதே’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குள் வந்தார்.
இயக்குநர் சக்தி நாய்களை பற்றி படம் பண்ணவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நிச்சயம் அதில் பெரிய கருணை இருக்கும் என்று நான் நம்புகிறேன். ரொம்ப நாளைக்கு முன்பு சக்தி என்னிடம் ஒரு கதை கூறினார். நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன். பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குநர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும், கருணையை பற்றியும்தான்.
ஒரு படம் உருவாக்கப்பட்டு அது மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து இங்கு வந்து இன்று நம்முன் இந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஆடி தங்கள் திறமைகளை காட்டிய இந்த மனிதர்களுக்கு சின்னதாக கை தட்டி வாழ்த்தினாலே போதும். அதுவே அவர்களுக்கான அங்கீகாரம்.
இந்த படத்தில் நியாயமும், தர்மமும் இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் அதை வெற்றி பெற வைப்பார்கள். கொஞ்சம் நீங்கள் கருணையோடு நடிகர்களை பார்க்க வேண்டும். இதை நான் சொல்வதற்கு அச்சப்படவில்லை. அது ” கங்குவா ” படம் தான். நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. அந்தப் படம் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. இதைக் கொஞ்சம் கருணையோடு நீங்கள் பார்க்க வேண்டும்.
சூர்யா ஒரு நல்ல நடிகர். அவருடைய அப்பா சிவக்குமார் ஒரு நல்ல நடிகர். இன்று நம்முடன் சிவாஜி கணேசன் இல்லை, எம்.ஜி.ஆர் இல்லை அவர்களோடு வந்தவர் சிவகுமார். அவர் வீட்டில் இருந்து வந்தவர் சூர்யா. உடனே நீங்க கேட்கலாம், “நீங்க, அடுத்து சூர்யாவிற்கு கதை கூற போகிறீர்களா..?” என்று..?! அப்படி எல்லாம் இல்லை. நான் கருணையோடு பார்க்க சொல்கிறேன்.
சினிமா என்பது ராக்கெட் அனுப்புவது போல; அதில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் வெடித்து சிதறிவிடும். அது போலத்தான் சினிமாவும். 500 கலைஞர்கள் சிறு சிறு இலைகளாக சினிமாவை உருவாக்குகிறோம். சில படங்களை உருவாக்கும்போது அப்படத்தின் இயக்குநர் இறப்பின் விளிம்பிற்கு செல்கிறான்.
படம் நல்லா இல்லை என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஏனென்றால் 150 ரூபாய் கொடுத்துதான் பார்க்கிறோம். ஆனால் சினிமாவை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். சினிமா மட்டும்தான் அறத்தையும், அழகையும் நமக்கு காட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்..” என்றார்.
லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசும்போது, “இந்தப் படத்தின் கதாநாயகன் குணாநிதியும், இயக்குநர் சக்திவேலும் என் நண்பர்கள். மேலும், நான் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற குணாநிதிதான் காரணம்.
இயக்குநர் மிஷ்கின் அவர்கள் கூறியதுபோல் உண்மையும், நேர்மையும் படத்தில் இருந்தால் படம் வெற்றி பெறும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். இதில் உண்மை, நேர்மை இரண்டையும் தாண்டி ஒரு உயிரோட்டமும் உள்ளது. உங்களுக்கான நம்பிக்கையாக நான் முன் இருக்கிறேன்.
ஏனென்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போல் வெற்றிக்காக நான் காத்திருந்தபோது இதே பத்திரிக்கையாளர்களும், மக்களும் ஆதரவளித்தார்கள். அதேபோல் இத்திரைப்படத்திற்கும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்திரைப்படம் நல்ல திரைப்படம் என்பதை தாண்டி சுவாரசியங்கள் நிறைந்ததாக இருக்கும். மேலும் அம்மாவாக நடித்த நடிகை ஸ்ரீரேகா மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்..” என்றார்.
தயாரிப்பாளர் சங்கமித்ரா சௌமியா அன்புமணி பேசும்போது, “அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், சிறப்பு விருந்தினராக வந்திருக்கக் கூடிய இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் அருன் விஷ்வா, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கும் மற்றும் அலங்கு திரைப்படத்தின் அனைத்து குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திரைப்படதில் முதுகெலும்பாக செயல்பட்டது எனது இணை தயாரிப்பாளர் சபரிஷ் அவர்கள். மேலும் என்னை ஊக்கப்படுத்தி என்னை நன்றாக கவனித்துக் கொண்ட என் கணவர் சங்கர் பாலாஜி மற்றும் என் குடும்பத்தாருக்கும் என் நன்றிகள்.
இத்திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அச்சானியாக செயல்ப்படுவது சக்தி பிலிம் பேக்டரி திரு. சக்திவேலன் அவர்கள். இவர் இத்திரைப்படத்தின் விநியோகிஸ்தரராக வந்ததும் எங்களுக்குள் ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம் என மேலும் நம்பிக்கை வந்துள்ளது.
‘அலங்கு’ என்றால் ராஜராஜசோழன் காலத்தில் போர்க் களத்தில் உபயோகித்த நாய்களாகும். அப்பெயரை படத்தின் தலைப்பாக தேர்வு செய்த இயக்குநர் சக்திவேல் அவர்களுக்கு நன்றி. மேலும் ‘அலங்கு’ என்ற பெயர் அனவருக்கும் ஈர்க்கக் கூடிய பெயராக இருப்பது நெகிழ்வாக உள்ளது.
எங்கள் குழுவிற்குள் ஏதேனும் கசப்பான சூழ்நிலை வந்தாலும் அந்த நொடியே அதை தூக்கி எறிந்துவிட்டு படத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டோம். இப்படிப்பட்ட குழுவோடு இணைந்து பணியாற்றியது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது. திரையரங்கில் வந்து படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.
நடிகர் குணாநிதி பேசும்போது, “அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினருக்கும் படக் குழுவிற்கும் நன்றி. மற்றும் இந்த மேடையில் நானும் ஒரு நடிகராக எனக்கு அறிமுகம் கொடுத்தவர் திரு. கலைப்புலி எஸ்.தாணு அவர்களுக்கும் எனது நன்றி.
ஒரு புதுமுக நடிகராக எனக்கு அறிமுகம் கொடுத்தார் என்றென்றும் அவருக்கும் இயக்குநர் சக்திவேலும் கதை சொன்னார். கதை கேட்டவுடன் வியப்பில் இருந்தேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது. இக்கதையை தங்கை சங்கமித்ரா, தம்பி சபரேஷிடமும் கூறினேன். அவர்களும் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆனால் இதற்கான பொருட் செலவையும் இதில் இருக்கும் சவாலையும் யோசித்துக் கொண்டிருந்தோம்.
இத்திரைப்படம் ஒரு மேஜிக்காக அமைந்தது ஏனென்றால் இத்திரைப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி திரு.சக்திவேலன் உலகமெங்கும் வெளியிட தானாக முன் வந்தார், மற்றுமொரு வியப்பாக கூடிய விஷயம் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் ஆசி பெற்று படத்தின் டிரெய்லரை காண்பித்தோம். பின் பார்த்ததும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்தினார். அதுவே ”அலங்கு”க்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம்.
தன் நேரத்தை ஒதுக்கி வருகை தந்த இயக்குநர் மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. மற்றும் திரு. சீமான் அண்ணனுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் படத்தைப் பற்றி அதிகம் அக்கறை எடுத்து அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். 2 நாட்களுக்கு முன்புகூட எங்களையும் இந்தப் படத்தைப் பற்றியும் வாழ்த்தி செய்திக் குறிப்பை வெளியிட்டார்.
நான் தெருக்கூத்து, நாடகம், குறும்படம், துணை நடிகராக நடித்து இன்று கதையின் நாயகனாக வந்துள்ளேன். எங்களை ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் எங்களை வழிநடத்திய ஐயா திரு. ராமதாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் தயாரிப்பாளர் சங்கமித்ரா செளமியா அன்புமணி, தயாரிப்பாளர் சபரிஷ் என் பெற்றோர்கள், என் மனைவி அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஒரு மருத்துவராக அறுவை சிகிச்சையில் இருக்கும்போது இல்லாத ஒரு பதட்டம் இந்த மேடையில் ஏற்படுகிறது. மேலும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 27 அன்று படம் வெளியாகிறது. படத்தை மக்களிடையே கொண்டு சென்று, மிகப் பெரிய வெற்றியடைய வைக்குமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் பேசும்போது, “இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி மற்றும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் தயாரிப்பாளர் அருண் விஷ்வா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கதையின் நாயகனாக குணாநிதி மற்றும் அனைத்து நடிகர்களும் தங்களின் முழு உழைப்பையும் போட்டு நடித்துள்ளார்கள் . இத்திரைப்படத்தில் “காளி” எனும் கதாப்பாத்திரதில் நடித்திருக்கும் நாய் மிகவும் சிறப்பாக ஒத்துழைத்துள்ளது. படம் வரும் டிசம்பர் 27 அன்று படம் வெளியாகிறது. இந்தப் படத்தை மக்களிடையே கொண்டு சென்று மிகப் பெரிய வெற்றியடைய செய்யுமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “இத்திரைப்படத்தில் கதாநாயகனின் தாய் மாமனாக நடித்துள்ளேன். கதையின் நாயகன் குணாநிதி அவருடைய நடிப்பு முதல் படம் போல் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக உள்ளது . இயக்குநர் சக்திவேல் மற்றும் இந்த படக் குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திரைப்படத்திற்காக கேரளாவில் படப்பிடிப்பிற்காக சென்றோம் அங்கே நடந்த நினைவுகள் எல்லாம் மறக்க முடியாதவை. இந்த திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.” என்றார்.
தயாரிப்பாளர் சபரீஷ் பேசும்போது, “திரைத்துறையில் திரு.கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் கொடுத்த அந்த அறிமுகம் எங்களுக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து, இந்த ‘அலங்கு’ திரைப்படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது.
இதில் தயாரிப்பாளராக சங்கமித்ரா செளமியா அன்புமணி அவர்கள் இணைந்தது மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. இயக்குநர் சக்திவேல் எங்களிடம் என்ன கதை கூறினாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார். எங்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் அவர்கள் சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
மேலும் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களான செம்பன் வினோத், அப்பானி சரத், ஸ்ரீரேகா, கொற்றவை மற்றும் பலர் சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இறுதியாக சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் அண்ணன் இணைந்தது மிகவும் பலமாக அமைந்துள்ளது. என் குடும்பத்தாருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெறிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படம் டிசம்பர் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் தங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..” என்றார்.









