full screen background image

அக்காலி – சினிமா விமர்சனம்

அக்காலி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை பி.உகேஷ்வரன் தயாரித்துள்ளார்.

படத்தில் நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத்கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கிரி மர்பி, கலை இயக்கம் – தோட்டா தரணி, உடைகள் – பூர்ணிமா ராமசாமி, சண்டை இயக்கம் – தினேஷ் காசி, எழுத்து, இயக்கம் – முகம்மது ஆசீப் ஹமீது.

‘அக்காலி’ என்றால் இறப்பே இல்லாதவன்.. என்ற அர்த்தத்தில் வெவ்வேறு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட வார்த்தையாம்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஜெயக்குமார் தலைமையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவினருக்கு கல்லறைகளில் பிணங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் குழிகளைத் தோண்டி பிணங்களை எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைக்கிறது.

இதனால் தனது போலீஸ் குழுவுடன் அந்த மயானத்திற்குச் சென்று சோதனையிடுகிறார் ஜெயக்குமார். அப்போது அந்த இடத்தில் சாத்தானை வழிபடும் ஒரு குழுவினர், விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெயக்குமார் கண்டுபிடிக்கிறார்.

அது குறித்து மேலும் விசாரிக்கத் துவங்கும்போது, அவர்களின் நெட்வொர்க் பெரியது என்றும், அவர்களைச் சுற்றி பல மர்மங்கள் இருப்பதையும், பலர் காணாமல் போனதன் பின்னணியில் இந்தக் குழுவினர் இருப்பதையும் கண்டறிகிறார் ஜெயக்குமார்.

ஆனால் இவரது உயர் அதிகாரியான தலைவாசல் விஜய் விசாரணையைத் தடுத்து நிறுத்துகிறார். ஜெயக்குமாரோ இதன் பின்னணியைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்பதற்காக தனித்து விசாரணைக் களத்தில் குதிக்கிறார்.

இப்போது அவரைச் சுற்றியே பல மர்மங்கள் நடக்கிறது. அந்த மர்மங்கள்தான் என்ன..? ஜெயக்குமார் கண்டறிந்த்து என்ன..? நரபலி உணமையா..? சைத்தானை வணங்குபவர்கள் யார்..? என்பதெல்லாம் இந்தப் படத்தில் குழப்பியடித்திருக்கும் திரைக்கதைகள்..!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெயக்குமார் தனது அனுபவம் வாய்ந்த சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். படம் நெடுகிலும் வந்து கதையின் நாயகனாகவும், திரைக்கதையை நகர்த்தும் வகையில் அடுத்தடுத்த காட்சிகளுக்கு லீட் கொடுத்து தன்னால் முடிந்த உதவியைச் செய்திருக்கிறார் ஜெயக்குமார்.

பாதராக நடித்திருக்கும் நாசர் இரட்டை வேடங்களிலும் மிரட்டியிருக்கிறார். தோற்றம், பேச்சு, பாடி லாங்குவேஜ் என்று பலவற்றிலும் நாசர் தன் இருப்பைப் பலமாகக் காண்பித்திருக்கிறார்.

நேரத்தை வீணாக்காமல் அடுத்த வேலையைப் பார்க்கும்படி சொல்லிக் கொண்டேயிருக்கும் காவல்துறை உயர் அதிகாரியான தலைவாசல் விஜய், 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கேஸை திரும்பவும் வந்து விசாரித்தபடியே கதையை நமக்குச் சொல்லும் புதிய போலீஸ் அதிகாரியான ஸ்வயம் சித்தா, கருப்பு உலகத்தைச் சேர்ந்த ஒருவராக நடித்திருக்கும் வினோத் கிஷன், பத்திரிக்கை ஆசிரியரான வினோதினி, சாத்தான் குழுவால் பாதிக்கப்பட்டவரான அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் வித்தியாசமான மேக்கப் மற்றும் உடையலங்காரத்தோடு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பேய் பிடித்த கேரக்டரில் நடித்திருக்கும் தாரணி தனது ஆக்ரோஷமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இதேபோல் பிளாக் மேஜிக்கால் அடிமையாக்கப்பட்டிருக்கும் யாமினியும் பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார்.

படம் முழுவதும் இருட்டிலேயே இருப்பதால் கிரி முர்பியின் ஒளிப்பதிவு நம்மையும் அந்த அமானுஷ்ய உலகத்துக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது. அனிஷ் மோகன் ஒரு த்ரில்லர் படத்துக்கான இசையைக் கொடுத்திருக்கிறார்.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் சாத்தான் வழிபாட்டுக் கூடத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் என்பதால், இதனுடன் தோட்டா தரணியின் கலை இயக்கமும் கச்சிதமாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது.

படத் தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் மனம் வைத்து இன்னும் பல காட்சிகளில்.. குறிப்பாக அந்த சேஸிங் சண்டைக் காட்சி உட்பட நீளமான பல காட்சிகளில் கத்திரியைப் போட்டு நம்மைக் காப்பாற்றியிருக்கலாம்.

இந்தப் படத்தில் VFX காட்சிகள் முக்கியப் பங்கு வகிப்பதோடு, பெரும்பாலான காட்சிகளை திரையில் பிரம்மாண்டமாக தெரிய வைத்திருக்கிறது.

படத்தின் துவக்கத்திலேயே இன்றைய நாள்வரையிலும் உலகம் முழுவதும் மர்மமான முறையில் உயிரிழப்பவர்கள் பற்றிய புள்ளி விவரத்தைக் காட்டுகிறார்கள்.

படத்தில் நான் லீனியர் முறையில் முன் பின்னாக நகரும் திரைக்கதைதான் படத்தின் மிகப் பெரிய எதிரி. இது முதல் பாதியிலேயே ரசிகர்களுக்குப் பெரும் குழப்பத்தை அதிகரிக்கிறது.

அமானுஷ்யம் பற்றிய விவரணைகள், சாத்தான் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லும்போது அதைக்கூட பொது அறிவாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் படத்துக்கு என்ன உதவி என்பது நமக்குப் புரியவில்லை.

நாசர் வந்து சில விளக்கங்கள் சொன்ன பிறகு கொஞ்சம் புரிந்தாலும் கடைசி அரை மணி நேரம்தான் படமே என்று சொல்லும் அளவுக்குக் கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக செபாஸ்டியன் யார் என்ற டிவிஸ்ட் முக்கியமானது. ஆனால் இதைப் பார்ப்பதற்காக அத்தனை நேரம் காத்திருக்க வேண்டுமா என்ற அலுப்புதான் நமக்கு ஏற்படுகிறது.

இயக்குநர் முகமது ஆசிப் ஹமீத் நரபலி என்ற கதைக் களத்தை முன் வைத்து வித்தியாசமான பாணியில் அதைச் சொல்ல முயற்சித்திருப்பது தெரிந்தாலும், பல இடங்களில் அதுவே படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

பல காட்சிகளின் நீளம் அதிமாக இருப்பதும் நம்மை மண்டை காய வைத்திருக்கிறது. குறிப்பாக படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதுடன், இதன் கதை என்னவென்று புரியாமல் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கிறது.

படம் முடிந்து வெளியில் வருபவர்களிடத்தில் “படத்தின் கதை என்ன..?” என்று கேட்டால் நிச்சயமாக உதட்டைப் பிதுக்குவார்கள். இப்படியொரு துர்ப்பாக்கிய நிலைமைக்கு ரசிகர்களைத் தள்ளியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்!

Our Score