புகழ் பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்ட படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய சர்வதேச விருதுகளைப் பெற்றது.
இப்படத்தின் தமிழ் மறு உருவாக்கத்தின் உரிமையை ‘உயிர்’, ‘மிருகம்’ மற்றும் ‘சிந்து சமவெளி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சாமி வாங்கி அதைப் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘அக்கா குருவி’ என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள்.
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கை ஆகிய கதாபாத்திரங்களுக்காக 200-க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக ‘மாஹின்’ என்ற சிறுவனும், ‘டாவியா’ என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஒரு ஜோடி ‘ஷூ’ ஒன்று இடம் பெறுகிறது.
ஒளிப்பதிவு – உப்பல் வி.நாயனார், கலை இயக்கம் – வீரசமர், படத் தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார், இசை – ‘இசைஞானி’ இளையராஜா.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சாமி பேசும்போது, “நான் இயக்கிய மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல்தான் இயக்கப் போகிறேன்.
ஒரு முறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன்.
இது போன்ற படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை என்ற என் அக்காவின் கேள்விக்குப் பதிலாக, இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் உரிமையைப் பெற்றேன்.
இப்படம் 1980-களில் நடக்கும் கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பல இடங்களில் தேடி இறுதியாக, கொடைக்கானலுக்கு அருகிலுள்ள ‘பூம்பாறை’ என்று ஊரைத் தேர்ந்தெடுத்தேன்.
இந்த ஊரில் உள்ள வீடுகள் அனைத்துமே 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்ததுபோல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம்தான் சரியானது என்று நினைத்து படப்பிடிப்பினை இங்கேயே நடத்தி முடித்திருக்கிறோம்.
இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் ‘முதலில் படத்தை எடுத்துட்டு வா’ என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கி விட்டார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சிறப்பு விருந்தினராக ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை இயக்கிய இயக்குநர் மஜீத் மஜிதியை அழைக்கவிருக்கிறேன்…” என்றார் இயக்குநர் சாமி.