full screen background image

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘ஐங்கரன்’ படம் மே 5-ம் தேதி வெளியாகிறது..!

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘ஐங்கரன்’ படம் மே 5-ம் தேதி வெளியாகிறது..!

இயக்குநர் ரவி ராசுவின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘ஐங்கரன்’ படம் வரும் மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

காமன்மேன் பிரசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஔிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு – A.M.ராஜா முகமது, கலை இயக்கம் – G.துரைராஜ், பாடல்கள் – ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், ஷோபி, சண்டை இயக்கம் – ராஜசேகர், மக்கள் தொடர்பு – கோபிநாதன். ‘ஈட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலை விழா(கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் ஐங்கரன்’ படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும்போது, “உங்களின் இந்த உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. நான் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.

பள்ளி நாட்களில் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் கிரிக்கெட்டராக முயற்சி செய்திருப்பேன். இசை, நடிப்பு இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது எனக்கு கடினமாக தோன்றவில்லை.

உங்களின் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாக செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காக காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள்…” என்றார்.

அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் பாடல்களை பாடச் சொல்லி கேட்டனர். அவரும் ‘பேச்சுலர்’, ‘மதராசபட்டினம்’, ‘ஆடுகளம்’ போன்ற படங்களிலிருந்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தார். அப்போது மாணவர்கள் விசில் அடித்தும், உரக்கக் கத்தியும், கை தட்டியும், தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து ‘ஐங்கரன்’ படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் பேசும்போது, “இந்த ஐங்கரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. தற்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர் என்றால் அது ஜி.வி.பிரகாஷ்குமார்தான். அறிவு சார்ந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம்.

இதற்கு மாணவர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. வரும் மே மாதம் 5-ம் தேதி ஐங்கரன்’ படம் தியேட்டர்களில் வெளியாகிறது. அதன் பிறகு மே மாத இறுதியில் ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் ‘ஐங்கரன்’ படம் வெளியாக உள்ளது…” என்றார்.

Our Score