சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக் களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”.
இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன், சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் – சச்சுஸ் கிரியேஷன்ஸ், தயாரிப்பு – பவுலோஸ் ஜார்ஜ், எழுத்து இயக்கம் – சசீந்திரா கே. சங்கர், இசை – எஸ்பி வெங்கடேஷ், ஜுபைர் முஹம்மது, ஒளிப்பதிவு – ஜஸ்பால் சண்முகம், ராஜேஷ், செல்வகுமார், எடிட்டிங் – சரவணன், ஆடியோகிராபி – ஆர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்டண்ட் – கிக்காஸ் காளி, புரூஸ் லீ ராஜேஷ், கலை இயக்கம் – ருத்ரா திலீப், எம்.பாவா, நடனம் – தம்பி சிவா, ரொடக்ஷன் டிசைனர் – அலெக்ஸ் மேத்யூ, பத்திரிக்கை தொடர்பு – சரண்.
இயக்குநர் சசீந்திரா கே. சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் பின்னணி இசையைக் கையாண்டுள்ளார்.
வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக் குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் பேசும்போது, “சச்சு கிரியேஷன்ஸ் சார்பில் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த திரைப்படம் மே மாதம் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். இப்படத்தைத் திரையரங்குகளில் வந்து பாருங்கள், அனைவருக்கும் நன்றி..” என்றார்.
சிறு முதலீட்டு தயாரிப்பாளர் ஆர்.கே.அன்புச்செல்வன் பேசும்போது, “உண்மையில் அழகாகத் தெளிவான தமிழில், ஒரு டைட்டில் வைத்ததற்கே இந்த குழுவினரை பாராட்ட வேண்டும். தமிழே தெரியாமல் எழுதி வைத்துப் படிக்கிறார் தயாரிப்பாளர். தமிழை நம்பி வந்த இந்தத் தயாரிப்பாளரை நாம்தான் வளர்த்து விட வேண்டும். நம் சூப்பர் ஸ்டார்கூட தமிழ் தெரியாமல் வந்தவர் தான். யாராக இருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டும், இந்த படத்திற்குப் பெரிய வெற்றியைத் தர வேண்டும்.
சில நாட்கள் முன் தேவயானி மேடம் ஒரு விழாவில் சின்ன படங்களுக்கு 4 நாட்களாவது திரையரங்குகள் தர வேண்டும் எனப் பேசினார். இதை அனைத்து சங்கங்களும் ஆதரிக்க வேண்டும். அஜித் படம் ஓடி முடிந்து விட்டது, இனி அவர் எப்போது கால்ஷீட் தருவார் எனத் தெரியவில்லை. வருடத்தில் நான்கைந்து பெரிய படங்கள்தான் ஓடுகிறது, இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் சின்ன படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். நாம் ஒழுங்காகப் படமெடுப்பதில்லை. நல்ல படம் எடுத்தால் ஓடும். இந்தப் படம் ஓட வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.
தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மங்கை ராஜன் பேசும்போது, “இந்த அகமொழி விழிகள் படத்தின் விஷுவல்ஸ் பார்க்க அழகாக உள்ளது. தயாரிப்பாளர் வேறு மொழியிலிருந்து வந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். இங்கு தமிழில் பேச நினைத்த அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாயகன் நாயகி இருவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். இப்போதெல்லாம் படமெடுத்தால் வட இந்தியா ரைட்ஸ் வாங்குபவர்கள் இங்கிலீஷ் டைட்டில் வைக்கக் கோருகிறார்கள். ஆனால் இந்த தயாரிப்பாளர் வேறு மொழியிலிருந்து வந்தாலும் தமிழில் மிக அழகாக அகமொழி விழிகள் என வைத்துள்ளார். அதற்காகவே இப்படத்தை ஆதரிக்க வேண்டும். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்…” என்றார்.
தமிழ் நாடு திரையரங்கு சங்க செயலாளர் திருச்சி ஶ்ரீதர் பேசும்போது, “அகமொழி விழிகள் படத்தின் பாட்டு, விஷுவல்ஸ் மிக நன்றாக உள்ளது. படம் மிக நன்றாக வந்துள்ளது. திரையரங்குகளில் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது, 84 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. ஆனால் 4 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளது, இந்த நிலை நீடித்தால் திரையரங்குகள் அழியும். எல்லோரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். ஓடிடியிலும் யாரும் படம் வாங்குவது இல்லை. பெரிய படங்கள் மட்டுமே வாங்குகிறார்கள். இந்த நிலை மாற சின்னப் படங்கள் ஓட வேண்டும். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.
நாயகி நேஹா ரத்னாகரன் பேசும்போது, “மிக மகிழ்ச்சியாக உள்ளது. பவுலோஸ் சாருக்கு தான் முதல் நன்றி. இந்த மேடை வரை இந்தப் படம் வர அவர்தான் காரணம். அவருக்கு நன்றி. இயக்குநர் சசீந்திரா சார் ஒவ்வொரு சீனும் எனக்குச் சொல்லித் தந்து, என்னை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார். என் கோ ஸ்டார் ஆடம் மிகப் பெரிய ஒத்துழைப்பு தந்தார். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி..” என்றார்.
நாயகன் ஆதம் ஹசன் பேசும்போது, “இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள திரை பிரபலங்களுக்கு நன்றி. இந்த படம் 2, 3 ஆண்டுகளாக எடுத்தோம். நான் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இங்கு வந்து போகும் இடைவேளையில்தான் இந்தப் படத்தை எடுத்தார் இயக்குநர்.
இயக்குநர் மிக கண்டிப்பாக இருப்பார். ஒவ்வொரு டயலாக்கும் சரியாக வரும்வரை விட மாட்டார். ஒரு லாங் டயலாக் ஷாட் எடுக்கும் போது பல டேக் போனது, எனக்கே நம்பிக்கை போய்விட்டது. என்னை மாற்றிவிடுவார் என நினைத்தேன். ஆனால் மறுநாள் முதல் ஷாட்டில் ஓகே ஆனது. அப்போதுதான் நம்பிக்கை வந்தது. படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் தாருங்கள். நன்றி..” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. கேரளா நண்பர்கள் இந்தப் பட விழாவிற்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துதான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள்.
டிரெய்லர், மூணு பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்த வருடம் வெறும் 4 படம் வெற்றி. போன வருடம் 220 படங்களில் 8 படம்தான் வெற்றி. சின்ன படங்களில் 15 படம் வெற்றி. பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும்தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன் நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும்.
அகமொழி விழிகள் என்ன அழகான டைட்டில். அஜித் எப்போதும் தமிழ் டைட்டில் வைப்பார் ஆனால் இயக்குநர் எவனோ குட் பேட் அக்லி என டைட்டில் வைத்துவிட்டான். இப்போது சிவக்குமார் மகன் சூர்யா ரெட்ரோ என டைட்டில் வைத்துள்ளார். தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது. கேரள சகோதரர் தமிழில் டைட்டில் வைக்கிறார் தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை. நல்ல மனம் குளிர்ந்து மகிழ்ந்து இந்த அகமொழி விழிகள் திரைப்படம் ஜெயிக்க வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி..” என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “இந்த அகமொழி விழிகள் படம் கண் தெரியாத இருவரைப் பற்றிய படம். இப்படி ஒரு படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். நாயகன், நாயகி இருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். பாடல் எல்லாம் மிக அழகாக உள்ளது.
நம் தமிழ் சினிமா வந்தாரை வாழ வைக்கும். எந்த மொழியும் அதைச் செய்வதில்லை. இங்கு தமிழில் ஒழுங்காகப் படமெடுப்பதில்லை எனக் குறை சொன்னார்கள். ஆனால் எம் ஜி ஆர், ரஜினி, கமல் என அத்தனை பேரை உருவாக்கியது தமிழ் சினிமாதான். தமிழ் சினிமாவை குறை சொல்லாதீர்கள். தமிழில் தலைப்பு வைத்த இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி…” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “அகமொழி விழிகள் பெயரே மிக அழகாக உள்ளது. தமிழ்த் தெரியாத தயாரிப்பாளர் தனது மொழியில் தமிழை எழுதி வைத்துப் படிக்கிறார். தமிழ் மீதான அவரது மரியாதை வியக்க வைக்கிறது.
நான் சிவகாசி படமெடுத்த போது அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது அப்போது தெலுங்கில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேச கஷ்டப்பட்டேன், இப்போதுதான் புரிகிறது, நான் தமிழில் எழுதி வைத்துப் படித்திருக்கலாம். இப்படத்தின் பாடல், விஷுவல்ஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது.
தமிழ் சினிமா அழிந்து வருவதாகச் சொல்கிறார்கள். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தியேட்டரில் டிக்கெட் எவ்வளவு விற்க வேண்டும் என நிர்ணயிக்கும்போது, பாப்கார்னும் இந்த விலைக்குத்தான் விற்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஏன் இதை அரசாங்கம் செய்யக் கூடாது. மக்களுக்காகத்தானே அரசாங்கம்.
எப்போதும் கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும். தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள். அப்படிப் படமெடுத்தால் ஓடாது. இந்தப் படம் சின்ன பட்ஜெட்டில் அசத்தியுள்ளார்கள். விஷுவல் பார்க்க பெயிண்டிங் மாதிரி உள்ளது. அத்தனை உழைத்துள்ளார்கள். இது மாதிரி படம் வெற்றி பெற வேண்டும். நன்றி..” என்றார்.
இயக்குநர் சசீந்திரா கே.சங்கர் பேசும்போது, “இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. திரைப்படத்தை, மனிதனை அரசியலை தூக்கிப் பிடிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. என் தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் கனவை புரிந்து நான் சொன்ன கதையை நம்பி இந்தப் படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் முதலீடு செய்ய வேண்டுமெல்லவா… அது முக்கியம். ஒரு தயாரிப்பாளர் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை.
சினிமாதான் நம் இணைப்புக்கு ஊண்டுகோலாக இருக்கிறது. நான் மலையாளி. ஆனால் என் பாட்டி தமிழ்தான். என் வேர் தமிழ்தான். மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் தமிழில் இருந்து வந்த மொழிகள்தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மொழி. இந்த படத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டோம் வாழ வையுங்கள். என்னை இயக்குநராக்கியது தமிழ்தான். நான் இங்குதான் பல ஆண்டுகளாக வேலை பார்த்தேன். இந்த மொழி வாழ வைக்கும் என நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அகமொழி விழிகள் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி..” என்றார்.
இசை கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான். பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறான் என்பதை, முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தில், பரபர திருப்பங்களுடன் சொல்லி, ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் அட்டகாசமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
மே மாதம் 9-ம் தேதி தமிழகமெங்கும் இப்படத்தினை திரைக்குக் கொண்டுவர படக் குழு திட்டமிட்டுள்ளது.