full screen background image

“இந்த நேரத்தில் இதெல்லாம் தேவைதானா..?” – நடிகைகளைக் கண்டிக்கும் ஸ்ருதிஹாசன்..!

“இந்த நேரத்தில் இதெல்லாம் தேவைதானா..?” – நடிகைகளைக் கண்டிக்கும் ஸ்ருதிஹாசன்..!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் உடல்களை எரிக்கக்கூட சுடுகாடு கிடைக்காத நிலையில் நாடு தற்போது அல்லலோகப்பட்டுக் கொண்டிருக்கும்போது எங்கோ ஒரு நாட்டில் ஹாயாக சுற்றுலா கொண்டாடி வரும் புகைப்படத்தை நடிகர், நடிகைகள் வெளியிடுவது சரிதானா என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சமீப காலமாக மாலத்தீவு அரசு தங்களது நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக இந்தியாவில் இருந்து பல பிரபல நடிகர், நடிகைகளை தங்களது சொந்த செலவில் மாலத்தீவிற்கு அழைத்து அவர்கள் மூலமாக தங்களது நாட்டின் அழகினையும், சுற்றுலா வசதிகளையும் பரப்புரை செய்து வருகிறது.

இந்த மாலத்தீவு பிரச்சாரப் பயணத்தை காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், ஊர்வசி ரவுத்துலா, ஓவியா… பிக்பாஸ் நட்சத்திரங்களான வனிதா, யாஷிகா ஆனந்த்வரையிலும் முக்கிய பிரபலங்கள் பங்கெடுத்துள்ளனர்.

இதில் உச்சக்கட்டமாக பாலிவுட் நடிகையான அலியா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6-வது நாளே மாலத் தீவுக்கு தனது காதலர் ரன்பீர் கபூருடன் வந்து கொண்டாடினார். அவர்கள் மாலத்தீவில் தாங்கள் கொண்டாடிய மகிழ்வினை புகைப்படங்களாவும், வீடியோக்களாகவும் இன்ஸ்டாகிராமிலும், டிவீட்டரிலும் வெளியிட்டார்கள்.

மேலும் நடிகைகள் ஜான்வி கபூர், சாரா அலிகான் ஆகியோரும் இப்படி தாங்கள் விடுமுறையைக் கொண்டாடி வரும் புகைப்படங்களை வெளியிட்டனர்.

இதைப் பார்த்த இணையவாசிகள், தற்போது நாடே கொரோனாவால் அல்லாடிக் கொண்டிருக்கும்போது இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் தேவைதானா என்று கொதித்துப் போனார்கள்.

“சக மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில், இவங்களுக்கு இப்ப இது தேவையா..?” என்று இவர்களைக் கண்டித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

திரையுலக நட்சத்திரங்களின் இந்த நடவடிக்கைகளை நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

” மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரம் இது. மாஸ்க் இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிக்கும் நேரமல்ல.. நீங்கள் சவுகரியமாக இருந்தால் அதை உங்களுடனே வைத்துக் கொள்ளலாம். அதை மக்கள் முன் வெளிப்படுத்த தேவையில்லை. காரணம், அவர்களே கஷ்டத்தில் உள்ளார்கள். புரிந்து கொள்ளுங்கள்..” என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

நடிகை ஸ்ருதி ஹாசனின் பேச்சு இப்போது சமூக வலைத்தளங்களில் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Our Score