மூன்று வருடங்கள் கழித்து தமிழ்ப் படங்களில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.
2017-ம் ஆண்டு ‘சங்கிலி புங்கிலி கதவத் திற’ படத்தில்தான் கடைசியாக நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு வந்து குவிந்த புதுமுக நடிகைகளின் பாய்ச்சலில் ஓரங்கப்பட்டப்பட்டிருந்தார்.
தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ என்னும் தமிழ்ப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதிவ்யா. இந்த நேரத்தில் இன்னொரு வாய்ப்பாக கவுதம் கார்த்திக்கு ஜோடியாக இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
இந்தப் புதிய படத்தை எல்.சிந்தன், ராஜேஷ்குமார் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இதே தயாரிப்பாளர்களுக்காக பத்ரி தற்போது ‘பிளான் பண்ணி பண்ணணும்’ என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். அத்திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை.
அதற்குள்ளாக பத்ரி கூறிய கதை தயாரிப்பாளர்களுக்குப் பிடித்துப் போனதால் இந்தப் புதிய படத்தையும் உடனேயே துவக்கிவிட்டார்கள்.
இந்தப் புதிய படம் பற்றி இயக்குநர் பத்ரி பேசும்போது, “நாயகன் கவுதம் கார்த்திக் வட சென்னைவாசி. ‘வெரலு’ என்ற புனைப் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர் படத்தில் பிஸியோதெரபிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கவுதம் கார்த்திக் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி வெளியில் வருகிறார்.. தப்பிக்கிறார்.. என்பதுதான் கதை, திரைக்கதை. இந்தப் படத்திற்காக சென்னை, கேரளா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் படப்பிடிப்பினை நடத்தவுள்ளோம். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது..” என்றார்.