2016-ல் தென்னிந்திய அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சனம் ஷெட்டி, இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் ஹீரோயினாக நடித்து வெளிவர இருக்கும் ‘சவாரி’ படம் மிக நன்றாக வந்திருப்பதாக மிகுந்த உற்சாகத்தோடு பேசுகிறார்.
“சவாரி’ படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம். இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கிறது. மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
படத்தின் ஹீரோவான பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன். கதைப்படி கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமண தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும். அதன் பின்பு பல எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்கள் நிகழும்.
படத்தில் இடம் பெறும் ஒரு டூயட் பாடலுக்காக நான் கடலில் கட்டுமரத்தில் பயணிக்க வேண்டி இருந்தது. அதற்கு முன்பு நான் கட்டுமரத்தை பார்த்த மாதிரிகூட இல்லை. எனக்கு அதுதான் முதல் கட்டுமரப் பயணம். அந்த ஷூட்டிங் முழுக்க நான் கட்டு மரத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழப் போவதும், ஒவ்வொரு முறையும் பெனிட்டோ என்னை இழுத்துப் பிடித்து கட்டு மரத்துக்குள் அமர வைப்பதுமாக… நான் ரொம்ப பயந்து போய்விட்டேன் . என்னால் மறக்க முடியாத அனுபவம் அது.
சினிமாவில் என்னுடைய ரோல் மாடல் ஸ்ரீதேவிதான். அவங்களோட தீவிர ரசிகை நான். அவர்களைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் எத்தனையோ இன்னும் சொல்லப் போனால் அவரைப் போலவே நடிக்கக்கூட முயல்கிறேன். நடிப்பில் என்னுடைய திறமையை வெளிப்படுத்தும்படியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இயக்குநர் குகனும் ஒளிப்பதிவாளர் செழியனும் சிறப்பாக பணியாற்றி, குறைந்த கால கட்டத்தில் மினிமம் பட்ஜெட்டில் மிக சிறப்பான ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
எங்களது ‘சவாரி’ படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. இதன் மூலம் எங்களுக்கு ஒரு பெரிய சக்தி கிடைத்துள்ளது. அவர்கள் எங்கள் படத்தை கண்டிப்பாக அடுத்த உயரத்துக்கு எடுத்துப் போவார்கள். தரமான படங்களுக்கு ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்கள் ‘சவாரி’ படம் ரொம்ப பொருத்தமான ஒன்று.
எங்கள் படத்தின் டீசரை வெளியிட்டுக் கொடுத்து எங்களை ஆதரித்த நடிகர் ஆர்யாவின் அன்புக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. ரொம்ப நன்றி ஆர்யா. ‘சவாரி’ படம் மார்ச் மாத மத்தியில் திரைக்கு வருகிறது. அதன் பிறகு எனது மார்க்கெட் சும்மா கும்மென்று உயரும் என்பது உறுதி..” என்கிறார், நம்பிக்கையோடு..!