full screen background image

2019-ல் ‘காபி’ படத்தின் மூலம் அடுத்த ரவுண்டை துவக்குகிறார் நடிகை இனியா..!

2019-ல் ‘காபி’ படத்தின் மூலம் அடுத்த ரவுண்டை துவக்குகிறார் நடிகை இனியா..!

‘வாகை சூட வா’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை இனியா. அதைத் தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த ‘பொட்டு’ என்கிற தமிழ்த் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலராலும் பாராட்டப்பட்டது.

தமிழைத் தவிர மலையாளம், கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியா, தற்போது ‘காபி’ என்னும் தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் புதிய பட வாய்ப்பு சம்பந்தமாக பேசிய நடிகை இனியா, “நான் தற்போது தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க  சாய் கிருஷ்ணா இயக்கத்தில் ‘காபி’ என்ற படத்தில் நடித்துள்ளேன்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இது இருக்கும். என் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் படமாகவும் இது இருக்கும். தமிழில் வலுவாக நான் கால் பதிக்கவும் இந்தப் படம் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் அதிரடியான ‘சத்யபாமா’ என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையிலும்  பெங்களூரிலும் நடந்தது. 

இதே நேரத்தில் மலையாளத்தில் பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஷின் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குநரின் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணனான நடிகர் இந்திரஜித் நடிக்கும் ‘தாக்கோல்’ என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவொரு பேமிலி சப்ஜெக்ட் ஸ்டோரி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் கேரளாவில் ஷூட்டிங் நடக்கிறது.

இன்னொரு சந்தோஷம் என்னவெனில்… கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோட ‘துரோணா’ங்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிச்சிட்டிருக்கேன். கல்வியை மையப்படுத்திய கதையில் உருவாகிற படம் இது. எனக்கு ரொம்பவும் நல்ல பெயரைக் கொடுக்கும்.

தமிழில்தான் ஒரு சின்ன இடைவெளி விழுந்திருச்சி. அது இந்த ‘காபி’ படத்தின் மூலம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.

மலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச ‘பரோல்’ங்கிற படத்துக்காகவும் ‘பெண்களில்லா’கிற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதாநாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் அமைப்பு எனக்கு வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு.

கூடவே, ‘பரோல்’ படத்துக்கு பிரேம் நசீர் விருதும் ‘பெண்களில்லா’ படத்துக்கு டி.வி சந்திரன் விருதும் கிடைச்சது. இந்த வகையில் 2018-ம் ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இதேபோல் இந்த 2019-ம் வருடமும் இதைவிடவும் அதிகமான சிறப்பினை எனக்குக் கொடுக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்..” என்றார் நடிகை இனியா.

 

Our Score