தெலுங்கு தேசத்தின் முன்னணி நடிகையான அனுஷ்காவின் பிறந்த நாளான இன்று, அவரது 48-வது படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய படத்தை ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
காணொலி ஒன்றின் வாயிலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள யூவி தயாரிப்பு நிறுவனம், “2013-ம் ஆண்டு ‘மிர்ச்சி’ திரைப்படத்தில் ‘அழகு ராணி’-யாக நமது உள்ளங்களை கொள்ளை கொண்டார் அனுஷ்கா. 2018-ல் ‘பாகம’தியில் ‘அச்சமில்லா அரசி’-யாக நம்மை ஆட்கொண்டார்.
தற்போது, ‘அரசி’ அனுஷ்கா ஷெட்டியும், யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். அனுஷ்காவின் 48-வது(#Anushka48) படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை இயக்குநர் மகேஷ் பாபு.பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி (அனுஷ்காவின் செல்ல பெயர்)…” என்று கூறியுள்ளது.
அனுஷ்காவின் பிறந்த நாளன்று வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூவி கிரியேஷன்ஸ், அனுஷ்கா கூட்டணியில் உருவான ‘பாகமதி’ எவ்வாறு நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதோ, அதே போல் இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
அனுஷ்காவின் பிறந்த நாளான இன்று திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.









