நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்கிற ‘பூவி’யை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் ஏ.எல். விஜய் உடன் விவாகரத்தான நிலையில், நடிகை அமலா பாலும், ஜெய்ப்பூரை சேர்ந்த அவரது நண்பரான பவ்நிந்தர் சிங்கும் நெருக்கமாக பல இடங்களில் சுற்றித் திரிந்த புகைப்படங்களும், மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்தது போன்ற திருமண போட்டோ ஷூட் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
அப்போது தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் “அந்த நபருடன் கேஷுவலாக எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுகிறார்…” என்று அமலா பால் கூறினார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் தங்கியிருந்த நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பவ்நிந்தர்சிங் இன்றைக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமா தயாரிப்புத் தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக நண்பர் பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி, அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திரைப்பட நிறுவனம தொடங்கியதாகவும், பின்பு 2018 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார் சாவடியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்து பவியும் அவரது உறவினர்களும் என்னை ஏமாற்றி, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து, என்னுடைய பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து எனக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் செய்ததாக” தனது புகார் மனுவில் அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பவியின் மீது வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.