full screen background image

“நடிகர் சங்கத் தேர்தலை உயர்நீதிமன்றமே நடத்த வேண்டும்” – நடிகர்கள் கார்த்தி, விஷால் கோர்ட்டில் மனு

“நடிகர் சங்கத் தேர்தலை உயர்நீதிமன்றமே நடத்த வேண்டும்” – நடிகர்கள் கார்த்தி, விஷால் கோர்ட்டில் மனு

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் இடத்தை குத்தகை விட்டதில் நடிகர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் வருகிற ஜூலை 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த்த் தேர்தலில் நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவர் நடிகர் சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். நடிகர் ராதாரவி, செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர்களை எதிர்த்து யார் போட்டியிடப் போகிறார்கள் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

அதேநேரம், நடிகர் சங்கத்தின் அலுவலக இடத்தை குத்தகைக்கு விட்டதற்கு நடிகர் விஷால், நாசர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியினர், இந்த தேர்தலில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.  

அந்த மனுவில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகிற ஜூலை 15-ம் தேதி புதன்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை என்பது வேலை நாள் என்பதால், நடிகர்கள் பலர் ஓட்டுப் போட வருவதில் சிக்கல் ஏற்படும். 

எனவே, நடிகர் சங்கத்தின் தேர்தலை ஜூலை மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை நடத்தினால், அனைத்து தரப்பினரும் விடுமுறை நாளில் வந்து ஓட்டு போடுவார்கள். எனவே, விடுமுறை நாளில் இந்த தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.
இதற்காக ஜூலை 15-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.

மேலும், நடிகர் சங்கத்தின் தேர்தலை 2 வக்கீல் கமிஷனர்கள் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் ரத்து செய்யவேண்டும். இந்த தேர்தலை, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும்.

அதேநேரம், இந்த தேர்தல் எந்த முறைகேடுகள் நடைபெறாமல், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற, தேர்தல் நடவடிக்கையை இந்த ஐகோர்ட்டே கண்காணிக்க வேண்டும்..” என்று கோரியுள்ளனர். 

இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score