‘விழித்திரு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தன் பெயரை குறிப்பிடவில்லை என்று சொல்லி அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த தன்ஷிகாவை காய்ச்சியெடுத்தார்.
தன்ஷிகா மேடையிலேயே இதற்காக டி.ஆரிடம் மன்னிப்பு கேட்டும் ஆவேசம் அடங்காமல் பல்வேறு வார்த்தைகளால் குதறித் தள்ளினார்.
இதன் வீடியோவை பார்த்த திரையுலகத்தினர் பலரும் இப்போது டி.ஆர். மீது கடும் கோபத்தில் உள்ளனர். சின்னப் பொண்ணு.. மறந்து போய் சொல்லாமல் இருந்திருக்கும். மறதி எல்லாருக்கும் வர்றதுதானே..? இதுக்கெதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்று பலரும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷாலும் நேற்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் தன்ஷிகாவை அவமானப்படுத்தி பேசிய நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரை வன்மையாகக் கண்டித்துள்ளார் விஷால்.
இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும், தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும்கூட டி.ஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.
டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய் தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய் தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கை தட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்…” என்று அந்த அறிக்கையில் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தக் கதையின் கூடுதலாக டி.ஆர். மிக விரைவில் இன்னொரு பேட்டியளித்து பிரச்சினையை பெரிதாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். விஷால் தன் அறிக்கையின் துவக்கத்தில் படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் என்று துவக்கியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ‘விழித்திரு திரைப்படம்’ என்று சொல்லியிருந்தால்தான் என்ன..?
ஒரு பத்திரிகை மற்றொரு பத்திரிகையின் பெயரைக் குறிப்பிடாமல் அதில் வந்த செய்தியை தனது பத்திரிகையில் குறிப்பிடுவதுபோல, விஷால் எழுதியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.