full screen background image

‘மாஸ்டர்’ படத்திற்காக 25 சதவிகித சம்பளத்தை விட்டுக் கொடுத்த விஜய்

‘மாஸ்டர்’ படத்திற்காக 25 சதவிகித சம்பளத்தை விட்டுக் கொடுத்த விஜய்

‘மாஸ்டர்’ திரைப்படம் என்றைக்குத் துவங்கியதோ, அன்றிலிருந்து அடுக்கடுக்காய் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.

துவக்கத்திலேயே தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவால் இந்தப் பெரிய பட்ஜெட்டை தாங்க முடியாமல் போக.. பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளரான லலித்குமார், இடையில் இணைத் தயாரிப்பாளராக இந்த பிராஜெக்ட்டில் நுழைய வேண்டியதாகிவிட்டது.

அதைத் தொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது வருமான வரித்துறையினரின் தொடர்ச்சியான சோதனை மற்றும் விசாரணையில் 5 நாட்கள் படப்பிடிப்பினை ரத்து செய்தாக வேண்டிய நிலைமை.

படம் முழுமையாக முடிவடைந்து ரிலீஸுக்குத் தயார் என்ற நிலைக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் தாக்குதலினால் உலகம் முழுவதும் ஏற்பட்ட லாக் டவுனால் தமிழகத்திலும் தியேட்டர்கள் மூடப்பட முற்றிலுமாக வெளியீடு தாமதமானது.

தற்போது தியேட்டர்கள் திறந்த பிறகாவது வந்துவிடும் என்று எதிர்பார்த்தால் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் பலவித சிக்கல்களைக் கொடுத்துவிட்டார் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய்யின் பெயரிலேயே அவரைக் கேட்காமலேயே கட்சியைத் துவக்கி அந்தப் பெயரை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்வதுவரையிலும் போய்விட.. வேறு வழியில்லாமல் தன் தந்தையை எதிர்த்தே அறிக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் போய்விட்டார் விஜய். இதையொட்டி விஜய்யின் ரசிகர் மன்றத்திலும் பலவித குழப்பங்கள். தேக்க நிலைகள்.

அந்தப் பிரச்சினை முடிந்தாலும் மாஸ்டர்’ வெளியீட்டுக்கு வெறும் 50 சதவிகித பார்வையாளர்கள் போதாது. முழுமையாக டிக்கெட் விற்பனை செய்தால் மட்டுமே போட்ட காசை எடுக்க முடியும் என்று விநியோகஸ்தர்கள் சொல்ல.. அதற்காக அரசுத் தரப்பிடம் கெஞ்சிக் கூத்தாடி முதல்வரை சந்தித்து கோரிக்கையும் வைத்தார் விஜய்.

விஜய்யின் கோரிக்கையை ஏற்று அரசு 100 சதவிகித டிக்கெட்டுகள் விற்பனைக்கு அனுமதியளித்தாலும் மத்திய அரசு அதனை எதிர்க்க.. வேறு வழியில்லாமல் 2 நாட்களிலேயே அந்த உத்தரவு வாபஸாகியது. இப்போது மாஸ்டர்’ படத்திற்கு இன்னமும் பிடி இறுகியது.

ஆனாலும், வேறு வழியில்லாமல் மாஸ்டர் படத்தை ஜனவரி 13-ம் தேதியே வெளியிடுவதற்கு அனைத்து வேலைகளையும் தயாரிப்பாளர் தரப்பு செய்து வருகிறது.

இப்போது தினத்திற்கு எத்தனை ஷோக்களை திரையிடலாம் என்று அரசின் வழி காட்டுதலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். ஆனாலும், ஒரு நாளைக்கு 5 ஷோக்களுக்கு அதிமாகத் திரையிட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது என்பதால் தியேட்டர்களுக்கு அடுத்தடுத்த ஷோக்களுக்கான நேரம் வேண்டும் என்பதால் தினமும் 5 காட்சிகளை மட்டுமே ஓட்ட முடியும் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

இடையில் கோவை, மற்றும் சென்னை சிட்டி, செங்கல்பட்டு ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் படத்தைத் திருப்பிக் கொடுத்து காசைத் திருப்பிக் கேட்க அதையும் தயாரிப்பாளர் சமாளிக்க வேண்டியதாகிவிட்டது.

இதற்கிடையில் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதலில் இறங்க.. இந்த முறை தமிழ்த் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீண்டும் லாக் டவுனை அறிவித்ததால் அங்கெல்லாம் மாஸ்டர்’ படம் வெளியாகாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

சிங்கப்பூரில் முழு லாக்டவுன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கே ‘மாஸ்டர்’ வெளியாக முடியவில்லை. மலேசியாவில் இன்னமும் தியேட்டர்கள் திறப்பு பற்றிய முடிவு அறிவிக்கப்படவில்லை. இலங்கையிலோ தியேட்டர்களில் 25 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவால் அங்கும் வசூல் கிடைக்காத  நிலைமை.

இந்தச் சூழலில் வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்கள் பலரும் தாங்கள் கொடுத்தத் தொகையைப் பெருமளவு குறைத்துக் கொள்ளச் சொன்னதால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் அதையும் ஏற்றுக் கொண்டார்.

ஆக, எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மாஸ்டர்’ படம் ரிலீஸுக்கு முன்பேயே இப்போதே 75 கோடி நஷ்டத்தைச் சந்திக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த நேரத்தில்தான் தானே அழைத்து வந்த தயாரிப்பாளர்தான் லலித்குமார் என்பதால் அவரது கடன் சுமையைக் குறைக்க வேண்டி நடிகர் விஜய் தன்னுடைய சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டாராம்.

இதனால் தற்போது முழுமையாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது மூச்சு விட்டிருக்கிறார் தயாரிப்பாளர் லலித்குமார்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்கிற சந்தோஷத்தோடு தற்போது ‘மாஸ்டர்’ படத்தைத் தியேட்டர்களுக்குக் கொண்டு வர தீவிர முனைப்பில் இருக்கிறார் தயாரிப்பாளர் லலித்குமார்.

Our Score