full screen background image

“ரசிகர்களின் அன்பைத் தவிர வேறெந்த டைட்டிலும் தேவையில்லை…”-நடிகர் விஜய் டிவிட்டரில் பதில்..!

“ரசிகர்களின் அன்பைத் தவிர வேறெந்த டைட்டிலும் தேவையில்லை…”-நடிகர் விஜய் டிவிட்டரில் பதில்..!

ஒரு பக்கம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பெயர் நாளுக்கு நாள் ரிப்பேராகிக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி விஜய்யே கவலைப்படாமல் தன்னுடைய வேலையை பார்க்கத் துவங்கிவிட்டார்.

மற்றவர்களை போல தானும் ரசிகர்களுடன் நேரடியாக பேச வேண்டும் என்று நினைத்தவர் இன்றைக்கு திடீரென்று டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாட முன் வந்தார்.

இதற்காகவே காத்திருந்தாற்போல ரசிகர்கள் நொடிக்கொரு கேள்விகளை வீசிக் கொண்டேயிருக்க.. தேர்ந்தெடுத்த சில கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார் விஜய்.

கேள்வி : புதுமுக இயக்குநர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பு அளிப்பதில்லை?

பதில் : நான் இதுவரை நடித்துள்ள 58 படங்களில், 28 படங்கள் புதுமுக இயக்குநர்கள்தான். ஒ.கே.வா அண்ணா..?

கேள்வி : ‘கத்தி’ படம் கொடுத்தமைக்கு நன்றி. அனிருத்துடன் பணியாற்றியது குறித்து?

பதில் : சின்ன வயது. நிறைய ஆற்றல்.

கேள்வி : தலைவா.. நம்ம பயந்து ஒதுக்கிறோமா இல்ல பாய பதுங்குறோமா?

பதில் : பயமும் இல்லை.. பதுங்கவும் இல்லை. அனுபவம் தேடுகிறோம். அவ்வளவுதான்.

கேள்வி : சமீபகாலமாக உங்களது படங்களை வைத்து பலர் பிரச்சினைகளை எழுப்பும்போது உங்கள் மனதில் என்ன ஓடும்?

பதில் : இது என்னை மட்டுமே குறி வைத்து அல்ல.. எனது படங்களின் பின்னணியில் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களையும் நனைத்து வருத்தப்படுவேன்..!

கேள்வி : இன்னும் 10 வருடங்களில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில் : கடவுள் எழுதிய எனது வாழ்க்கை புத்தகத்தில் நம்பிக்கை இருக்கிறது. எனது புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது. எல்லா பக்கத்தையும் சந்தோஷமாகவே கடக்கிறேன். நாளை என்ன நடக்கும் என்று என்னால் கூற முடியாது. பலனை எதிர்பார்க்காமல் என்னுடைய கடமையைச் சரியாக செய்ய ஆசைப்படுகிறேன்.

கேள்வி : பணம், புகழ் என அனைத்திலும் வெற்றி. அடுத்தது என்ன?

பதில் : திருப்பி கொடுப்பது. நீங்கள் கொடுத்த இந்த அதிகமான அன்புக்கு என்னால் முடிந்ததையெல்லாம் நான் திருப்பி கொடுக்க வேண்டும். கொடுப்பேன்.

கேள்வி : நிறைய பிரச்சினைகள் இருந்தும் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். எப்படி இந்த சக்தி?

பதில் : அமைதிதான் எப்போதுமே பெரிய சக்தி.

கேள்வி : உங்களது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் : உழைத்திடு.. உயர்ந்திடு.. உன்னால் முடியும்.

கேள்வி : சமீபத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?

பதில் : ஜிகர்தண்டா, த்ரிஷ்யம்.

கேள்வி : இணையத்தில் ரசிகர்களிடையே சண்டைகள் அதிகமாக உள்ளது. உங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்..

பதில் : ஆம். இது துரதிஷ்டவசமானது. இம்மாதிரி சண்டையில் ஈடுபடுவதை விடுத்து, சமூக பிரச்சினைகளில் கவனம் செலுத்தி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி : உங்களது ரசிகர்கள் குறித்து..?

பதில் : வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள். நடிகன் – ரசிகன் தாண்டிய உறவு எங்களுடையது.

கேள்வி : உங்களது எதிர்ப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் : எதிரியையும் நேசிப்போம். நான் அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கேள்வி : முதலில் கோக் விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதற்கு எதிராக ‘கத்தி’ படத்தில் நடித்துள்ளீர்கள். ஏன் இந்த எதிர்மறை?

பதில் : ஆம், நான் இதற்கு முன் அந்த விளம்பரத்தில் நடித்தேன். சச்சின், ஆமிர்கான் போன்ற மிகப் பெரிய பிரபலங்களும் நடித்துள்ளனர். ஆனால் நான் தற்போது அந்த பிராண்டை விளம்பரப்படுத்துவதில்லை. கத்தி கதையைக் கேட்டபோது அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது. அதை ஜீவா கதாபாத்திரம் வழியாகப் பேசியுள்ளேன். மக்கள் இதே போல அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளும்போதும் கேள்வி எழுப்பினால் நான் மகிழ்வேன். என்னோட தவறுகளைத் திருத்திக் கொள்கிற சாதாரண மனுஷன்தான் நான்..

கேள்வி : சூப்பர் ஸ்டார் தலைப்பு பிடித்திருக்கிறதா… இளைய தளபதி தலைப்பு பிடித்திருக்கிறதா…

பதில் : நான் நடிக்க ஆரம்பித்தவுடன் மக்களுக்கு என்னை பிடித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததிற்கும் மேலாக உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. உங்களுடைய இந்த அன்பிற்கு முன்னால் எந்தவொரு தலைப்பும் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. நான் என்றும் உங்கள் விஜய்..

கேள்வி : கத்தி படம் பற்றி..?

பதில் : படம் வராதுன்னு சொன்னாங்க.. தியேட்டல் ஜன்னல உடைச்சாங்க.. 12 மணிவரைக்கும் டிக்கெட் கவுன்ட்டர் ஓபன் ஆகல. ஆனால், எண்ணி 12-வது நாள் படம்  100 கோடி வசூல்ன்னு சொல்றாங்க..

ரசிகர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து விட்டு “Thank you ppl, sorry I couldn’t answer everyone.. will soon do it again. En nenjil kudiyurukum anbu rasigargaluku nandri..” என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றார் விஜய்.

Our Score