full screen background image

படத் தயாரிப்பினால் மனைவி, பிள்ளைகளை பிரிந்த நடிகர்..!

படத் தயாரிப்பினால் மனைவி, பிள்ளைகளை பிரிந்த நடிகர்..!

நடிகர் விக்னேஷ்.. ‘எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது.. திடீர்ன்னு இப்படி…’ என்ற டயலாக்கை இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்.. பாவம்..!

vignesh

‘கிழக்குச் சீமையிலே’, ‘பசும்பொன்’, ‘ராமன் அப்துல்லா’, ‘சின்னத்தாயி’ என்ற பிரபல படங்களையும் சேர்த்து இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் பாலா உதவி இயக்குநராக இருந்தபோது, அவருடைய ரூம்மேட்டாக இருந்தவர்.

பாலாவின் ‘சேது’ படத்திலும், பாலுமகேந்திராவின் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர். கடைசிக்கட்ட குழப்பத்தினால் முடியாமல் போய் லைம்லைட்டை இழந்துவிட்டவர்.

ஆனாலும் மனம் தளராமல் உழைத்திருக்கிறார். சினிமாவில் ஹீரோவாக தலையெடுப்பதற்கு முன்பேயே லாட்டரி டிக்கெட் வித்து.. ஏவி.எம். ஸ்டூடியோ எதிரில் பீடா கடை.. ரியல் எஸ்டேட் என்று சில தொழில்களில் கிடந்த அனுபவம் கை கொடுக்க.. தொழிலையும் தொடர்ந்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டுதான் சவாழ்க்கையை சமாளித்திருக்கிறார்.

இடையில் திருமணமாகி ஒரு மகன், மகள் என்று குடும்பமும் பெரிதாகியுள்ளது. அடுத்து ஹீரோ வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் இந்த விக்னேஷும் செய்திருக்கிறார். அதுதான் இப்போது இவரது குடும்பத்தையே பிரித்திருக்கிறது..

‘ஆச்சார்யா’ என்ற படத்தை இன்னொருவருடன் இணைந்து தயாரித்தார். இதில் இவர்தான் ஹீரோ. படத்தில் இவரது நடிப்பு நன்றாக இருந்து இன்றுவரை பேசப்பட்டாலும் படம் ஓடவில்லை. கூடவே பார்ட்னரும் ஏமாற்றிவிட பெருத்த நஷ்டமாம்.

அடுத்து ‘சூரி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படமும் கடைசி நேரத்தில் ரிலீஸாக பணமுடை ஏற்பட.. தன்னுடைய சொத்தான கோயம்பேடு பக்கத்தில் இருந்த ஒரு நிலத்தை விற்று, அந்தத் தயாரிப்பாளருக்கு பண உதவி செய்தாராம். அந்தப் படமும் தோல்வியாகி, பணமும் கிடைக்கவில்லை..

மறுபடியும் ரியல் எஸ்டேட் பிஸினஸில் கால் பதித்து உழைக்க ஆரம்பித்திருக்கிறார். கொஞ்சம் காசு சேர.. திரும்பவும் கோடம்பாக்கத்து ஆசை வந்திருக்கிறது.. இந்த முறையும் மனம் தளராமல் ‘அவன் அவள்’ என்ற படத்தைத் தானே தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார் விக்னேஷ்.

இந்தப் படத்தின் தயாரிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் எடுக்கப் போய்… விக்னேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை வந்து அவர் கோபித்துக் கொண்டு தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு போய்விட்டாராம்..

பலவித பஞ்சாயத்துகள் செய்தும் அவர் திரும்ப வர மறுத்து, ‘விக்னேஷ் படத் தயாரிப்பை கைவிட்டால்தான் திரும்பவும் வருவேன்’ என்றவர் ‘தன்னை மன ரீதியாக துன்புறுத்தினால் தீக்குளித்து சாவேன்’ என்றும் விக்னேஷை மிரட்டிவிட்டாராம்..!

பாவம் விக்னேஷ்.. இப்போது ‘அவன் அவள்’ படத்தைத் தயாரித்து வைத்திருந்து ரிலீஸ் செய்யக் காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் மறுபடியும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பேச்சுலர் வாழ்க்கைக்கே திரும்பியிருக்கிறார்..

‘இந்தப் படம் ஓடினால்தான் இவருக்கு வாழ்க்கை’ என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. நடிகர் விக்னேஷுக்கு நிச்சயம் பொருந்தும்..

‘அவன் அவள்’ வெற்றி பெறட்டும்..!

Our Score