பிரபல நகைச்சுவை நடிகர் சூரி தனது 38-வது பிறந்த நாளை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடியிருக்கிறார். இதுவரையிலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்ட தனது ரசிகர் மன்றத்தினரையும் நேற்றைக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்கள் மூலமாக சென்னை, மதுரை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், கடலூர் உள்ளிட்ட இடங்களில் ரத்த தான விழாவையும் நடத்தியிருக்கிறார்.
சென்னை விஜயா மருத்துவமனையில் நேற்று முதல் ஆளாக ரத்தம் வழங்கி, ரத்த தான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் சூரி. அவரைத் தொடர்ந்து சூரி ரசிகர்களும் நண்பர்களும் ரத்த தானம் வழங்கினர்.
நடிகர் அஜீத்குமார் சூரி குடும்பத்தினரை நேரில் வரவழைத்து சூரிக்கு வாழ்த்து தெரிவித்தார். சூரியின் தாயார் சேங்கை அரசியிடம் மனம்விட்டுப் பேசிய அஜீத் தன் குழந்தைகளின் புகைப்படங்களையும் அவரிடம் காட்டி நெகிழ வைத்தார். சூரியின் மகன் சர்வானை மடியில் வைத்து விளையாடிய அஜீத் சூரி குடும்பத்தினர் அனைவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நடிகர் விஷால், சூரிக்காக வடபழனி முருகன் கோயிலில் அன்னதானம் நடத்தி வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார். நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, விமல், விஷ்ணு, அருள்நிதி, சுப்பு, சாந்தனு, இயக்குநர்கள் விக்ரமன், மனோபாலா, சமுத்திரகனி, சுசீந்திரன், பாண்டிராஜ், பொன்ராம், எஸ்.ஆர்.பிரபாகரன், முத்தையா உள்ளிட்டோர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தயாரிப்பாளர்கள் வேந்தர் மூவிஸ் மதன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ‘ரெட் ஜெயன்ட்’ செண்பகமூர்த்தி, திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
சாலிகிராமத்தில் தனது ஏரியாவாசிகளுடனும் நண்பர்களுடனும் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார் சூரி. ரத்த தானம், அன்னதானம், இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளும் சூரி பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் சார்பில் தமிழகம் முழுக்க நடத்தப்பட்டன.
இதுவரையிலும் ஓகேதான். ஆனால் இது மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளின் சார்பிலும் சூரிக்கு பிறந்த நாள் வாழத்துகள் வந்து குவிந்திருப்பதுதான் புருவத்தை உயர்த்த வைக்கிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரியை வாழ்த்தி ஒரு அறிக்கையே வெளியிட்டுள்ளார். அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவனத் தலைவர் வி.ஜி.சிற்றரசு தனது இனத்தவர் என்கிற முறையில் சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு சூரியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
ஆக.. சூரி அரசியல் கட்சிகளின் அதிகப்பட்ச எதிர்பார்ப்பில் இருக்கிறார் போலும்..!











