நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்குக் கிளம்பினார்.
அப்போது வீட்டு வாசலில் காத்திருந்த பத்திரிகையாளர்களிடத்தில் அவர் பேசுகையில், “எனக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நேரத்தில் கே.பாலச்சந்தர் சார் இல்லாதது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. இந்த விருது வாங்கிய பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கின்றேன்..” என்று தெரிவித்துவிட்டுக் கிளம்பினார்.
இதன் பிறகு சிறிது நேரத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்… “நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. ஒன்று தாதா சாகேப் பால்கே விருது பெற போகிறேன்.
அடுத்து என் 2-வது மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்குப் பயன்படக் கூடிய HOOTE என்கிற APP உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் மற்றவர்களுக்கு தங்கள் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களையும், விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் இந்த HOOTE APP மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE APP-ஐ என் குரலை பதிவிட்டு துவங்கப் போகிறேன்..” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.