பிரகாஷ் நிக்கி, கோயமுத்தூர் மண்ணின் மைந்தர். கொச்சியில் இசை சம்பந்தமான படிப்புகளை முடித்து, இசையமைப்பாளர் A.R.ரஹ்மானிடம் கீ ஃபோர்டு பிளேயராக பணியாற்றியவர்.
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரெளத்திரம்’ இவர் இசையமைத்த முதல் திரைப்படம். அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் பல்வேறு பண்பலை வானொலிகளில் மெகா ஹிட்டடித்த பாடல்கள். அதற்கு பிறகு இவர் ‘களம்’ என்ற படத்திற்கு இசையமைத்தார். இதன் பின்னணி இசை கோர்ப்பு, சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டது. அடுத்து, இயக்குநர் சாமி இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்திலும் இசையமைக்கவுள்ளார்.
மேலும் நல்ல கதைகளுக்காக காத்திருந்தவர் எதிர்பாராதவிதமாக இப்போது தயாரிப்பாளராக மாறிவிட்டார்.
தன்னுடைய தயாரிப்பாளர் அவதாரம் பற்றிப் பேசிய இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி, “ரெளத்திரம்’, ‘களம்’ படங்களுக்குப் பிறகு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டேயிருந்தன. ஆனால், ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும்.. இன்னும் நல்ல கதைகள் வேண்டும் என்ற தேடலில் இருந்தேன்.
அப்போதுதான் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி என்னிடம் வந்து ஒரு கதையைச் சொன்னார். அவர் சொன்ன கதை வேறொரு ட்ரெண்டில் இருந்தது. கதையைக் கேட்டு முடித்த அடுத்த நொடியே ‘நானே இந்த படத்தை தயாரிக்கிறேன்’னு சொல்லி தயாரிப்புப் பணியை ஏற்றுக் கொண்டேன்.
வேறெரு தளத்தில் இயங்கும் இந்த கதை ட்ரெண்டிங் சினிமாவையும் தாண்டி வேறொரு கோணத்தில் இருந்தது. இதுதான் இந்தப் படத்தை நான் தயாரிக்க முன் வந்த காரணம். விஜய் ஸ்ரீஜி இயக்கவிருக்கும் இத்திரைப்படம், நிகழ்காலத்தில் நடக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை சொல்லவிருக்கிறது.
ஒருவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை செய்தே முடிப்பான். அல்லது வேண்டாம் என்று முடிவெடுத்தால் அது கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் தொட மாட்டான். இது மனித இயல்பு. கொஞ்சம் சீரியஸாக சொன்னால் மன நோய் எனவும் சொல்லலாம். இதன் பிரதிபலிப்புதான் இந்த புதிய படம்.
இந்தப் படத்தில் 86 வயதான நடிகர் சாருஹாசன், ‘பவுடர் உலகின்’ டானாக நடிக்கிறார். பொதுவாக ‘பவுடர்’ என்றால் முகத்துக்கு போடும் பவுடர் என நினைப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் முழுவதுமே போதை மருந்துகளைத்தான் ‘பவுடர்’ என அழைப்பார்கள். இந்தப் படத்தின் கதையும் அதை அடிப்படையாகக் கொண்டதுதான்.
‘சூது கவ்வும்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜா, இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற படத் தொகுப்பாளர் பி.லெனினின் உதவியாளரான சுதா, இந்தப் படத்தில் படத் தொகுப்பு செய்யவிருக்கிறார்..” என்றார்.
படத் தயாரிப்பாளராக மாறியிருக்கும் இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கிக்கும், 86 வயதிலும் நடிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாய் நடிக்க வந்திருக்கும் நடிகர் சாருஹாசனுக்கும், புதிய அறிமுக இயக்குநரான விஜய் ஸ்ரீஜிக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.