வருகிற மே 13-ம் தேதி, உலகெங்கும் கோலாகலமாக வெளியாகவிருக்கும் ‘கோ-2’ படத்தின் கதாநாயகனான பாபி சிம்ஹா, இந்தப் படம் தனக்கு ஒரு பெரிய திருப்பத்தைக் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கையுடன் இருக்கிறார்.
நிக்கி கல்ராணிக்கு இணையாக, RS Infotainment தயாரிப்பில் பாபி சிம்ஹா நடித்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் மிக பெரிய ஹிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் ‘பில்லா’, இயக்குநர் சக்ரி டோலேட்டியுடன் ‘பில்லா-2’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய அனுபவஸ்தரான சரத், இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘கோ-2’ படத்தில் தனது கதாபாத்திரம் பற்றிப் பேசிய நடிகர் பாபி சிம்ஹா, “நான் இந்தப் படத்தில் துடிப்பான, உணர்ச்சிகரமான, உண்மையான பத்திரிகையாளன் வேடத்தில் நடித்திருக்கிறேன்.
சுயநலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில் மாநில முதலமைச்சருடன் நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
என் மனதுக்குத் தப்பென்று பட்டால் யாரென்று பார்க்காமல் எதிர்த்துக் குரல் எழுப்பும் எனது கதாப்பாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டியிருப்பதில் எனக்கே பெருமைதான்.
இந்த ‘கோ-2’ படத்தில் என்னுடைய இந்தக் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ள தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
எனக்கும் நடிப்பு ராட்சஷனான பிரகாஷ் ராஜ் சாருக்கும் இடையேயான காட்சிகள் திரையரங்கில் தீப்பொறி தெறிக்க வைக்கும் காட்சிகளாகும்.
இந்த வருடத்தில் வெளிவர காத்திருக்கும் என்னுடைய படங்கள் அனைத்துமே திரை உலகில் என் நிலையை இன்னமும் உயர்த்தும். அதற்கு முன்னோடியாக இந்த ‘கோ-2’ படத்தின் வெற்றி இருக்கும்..” என உறுதியாக கூறுகிறார் பாபி சிம்ஹா.











