“மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்தால் திரைப்படத் துறையில் நல்ல படங்கள் வெளிவர முடியாது. எனவே அதனை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்…” என்று நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ஒரு திரைப்பட கல்லூரி மாணவனாக பதில் சொல்கிறேன். இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் என்பது திரைப்படங்களுக்கு ஒரு சென்சார் போர்டையும் தாண்டி அடுத்தக் கட்ட சென்சாரையும் நியமிக்கிறது.
அதாவது ஒரு திரைப்படத்தை மறுபரிசீலனை செய்யக் கூடிய அதிகாரம் அரசியல்வாதிகளின் கைகளுக்குப் போய்விடுகிறது.
இப்படியெல்லாம் சட்டம் கொண்டு வந்தால், ‘பராசக்தி’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘சிறை’, ‘முதல்வன்’ மாதிரியான படங்களெல்லாம் இனிமேல் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே ஒரு கலைஞனாக ‘இந்தச் சட்டத் திருத்தத்தை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்..” என்று கூறியுள்ளார்.