full screen background image

சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை படமான ‘ஆரண்யம்’

சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை படமான ‘ஆரண்யம்’

காடும், காடு சார்ந்த இடங்களில் நடக்கும் காதல் கதையாக ‘ஆரண்யம்’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தைப் புதுமுக இயக்குநர் குபேர்.ஜி இயக்கியுள்ளார்.

புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து, ஸ்ரீஹேமா, தீப்பெட்டி கணேசன், மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ‘அன்னக்கொடி’ புகழ் சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம்.

டெலிபிலிமாக எடுக்க நினைத்த ஒரு கதையை படமாகவே எடுக்கலாம் என்று நண்பர்கள் ஊக்கம் தந்திருக்கிறார்கள் ஒருவர் தயாரிக்கவே முன் வந்திருக்கிறார். அவர்தான் இப்படத்தின் நாயகனாகியுள்ள ராம்.  இவருடன் சுபாஷ், தினேஷ், நானக் என நண்பர்கள்  இணைந்து தயாரிக்க முன் வரவே ‘ஆஹா ஓஹோ  புரொடக்ஷன்ஸ்‘ சார்பில் தயாரித்து உள்ளனர். 

“காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் சொல்லும் ஆஹா ஓஹோ  புரொடக்ஷன்ஸ் நினைவாக எங்கள் கம்பெனிக்கு அதையே பெயராக வைத்து படத்தை 60 நாட்களில் படத்தை எடுத்துள்ளோம். 

இது காடு சார்ந்த காதல் கதை. புதிய தளம். ‘பொறுப்பில்லாத நான்கு வாலிபர்களுக்கு ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவதுதான் முழு நேரத் தொழில். ஜாலியாக இருக்க ஒரு சிறு திருட்டில் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு செல்போனைத் திருடிவிடவே அதன் விளைவு விபரீதமாகி விடுகிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு காட்டுக்கு ஒடுகிறார்கள்.  முடிவு என்ன என்பதே கதை. 

‘குனிஞ்சாக்க பர்சடிப்போம்; அசந்தாக்க பல்டியடிப்போம். அசந்தநேரம் அடிக்கிறது எங்கள் பாலிசி’, என்கிற குத்துப் பாடலை ஏகாதசி எழுத ‘காதல் மாயவலை’, ‘மறைஞ்சி கிடந்த உலகமே’ போன்ற மற்ற 4 பாடல்களை மீனாட்சி சுந்தரம் எழுதியிருக்கிறார். இவர் பா.விஜய்யின் உதவியாளர்.

நிச்சயம் இந்தப் படம் புதிய அனுபவமாக இருக்கும். எதிர்பார்ப்பில்லாமல் வருபவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் திருப்தியளிக்கும். சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை போய் படத்தை முடித்து இருக்கிறோம். புதியதை என்றும் வரவேற்கும் ரசிகர்கள் இதையும் வரவேற்பார்கள்  என்று நம்புகிறேன்.” என்கிறார் அறிமுக இயக்குநர் குபேர்.ஜி.

வரும் 20-ம் தேதி ‘ஆரண்யம்’ உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது.

Our Score