full screen background image

குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது ‘ஆலம்பனா’ திரைப்படம்..!

குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது ‘ஆலம்பனா’ திரைப்படம்..!

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான அதிலும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள்தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது ‘ஆலம்பனா’ படக் குழு.

இந்தப் படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பூதமாக நடித்து அனைவரது மனதைக் கொள்ளைக் கொள்ளவுள்ளார் நடிகர் முனீஸ்காந்த். மேலும், வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என்று.. பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

நடிகர் வைபவ் நடித்த படங்களில், இந்தப் படம்தான் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பீட்டர் ஹெய்ன்,  கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய தரமான  படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

சமீபத்தில் இந்த ‘ஆலம்பனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி.. சமூக வலைத்தளங்களில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. போஸ்டரை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் படக் குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ந்தப் படத்தின் பூஜையின்போதே ‘இதுவொரு பேண்டஸி கான்செப்ட் படம்’ என்பதை படக் குழு தெரிவித்திருந்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மூலமாகக் குழந்தைகள் முதல் முதியோர்வரை குஷிப்படுத்தும் பூதத்தை மையப்படுத்தியவிதமாக ‘ஆலம்பனா’ உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த உற்சாகத்துடன் படம் பற்றி இயக்குநர் பாரி கே.விஜய் பேசியபோது, “படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது. இதற்காகத்தான் இவ்வளவு கடுமையாக உழைத்தோம்.

போஸ்டரிலேயே இது எந்த மாதிரியான கதைக் களம் என்பதைத் தெரிவித்துள்ளோம். பூதத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். நாயகனாக வைபவ் சாரும், பூதமாக முனீஸ்காந்த் சாரும் நடித்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான காட்சிகள் கண்டிப்பாக ரசிகர்களை ரசிக்க வைக்கும்.

இந்தப் படத்தின் கதைப்படி சில காட்சிகளைப் படமாக்குவது கடினம். அதைத் தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் படமாக்கி இருக்கிறோம். இப்போது சொல்வதைவிட, படமாகப் பார்க்கும்போது அதை உணர்வீர்கள். ஒரு சண்டைக் காட்சியை வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளோம்.

அதே போல் 72 மணி நேரம் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றது. இடையே ஒரு சின்ன இடைவெளி மட்டும் விட்டுவிட்டு, தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தினோம்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஹிப்  ஹாப் ஆதி சார் பின்னணி இசையமைக்கவுள்ளார். கிராபிக்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில நாட்களில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளோம். அதில் பல்வேறு ஆச்சரியமூட்டும் அறிவிப்புகள் இருக்கும். கண்டிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி உங்களைக் கவர்ந்ததோ, அதே போல் படத்தின் டீஸர் தொடங்கி அனைத்து விஷயங்களும் உங்களைக் கவரும்…” என்றார் இயக்குநர் பாரி கே.விஜய்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

Our Score