திட்டமிட்டபடியே படப்பிடிப்பை துரித வேகத்தில் நடத்துவதும், முடிப்பதும் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மறைந்துபோன திறமையாகவே ஆகிவிட்டது என பல தயாரிப்பாளர்கள் ஆதங்கதோடு தங்கள் வலியை உணர்த்தி வருகிறார்கள்.
ஆனால், நடிகர் ஆதியின் நடிப்பில் உருவாகிவரும் ‘க்ளாப்’ திரைப்படம், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு செய்தியை சொல்கிறது.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன், இந்த ‘க்ளாப்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆதி நாயகனாகவும், அகன்ஷா சிங் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், கிருஷ்ணா குரூப், நாசர், பிரகாஷ் ராஜ், முனீஸ்காந்த், ‘மைம்’ கோபி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இசையில், பிரவீன் குமாரின் ஒளிப்பதிவில், ராகுலின் படத் தொகுப்பில், வைர பாலனின் கலை இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநரான பிருத்வி ஆதித்யா இயக்குகிறார்.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது இந்த ‘க்ளாப்’ திரைப்படம்.
இந்தக் ‘க்ளாப்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறுகிறார்.
“எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. திட்டமிட்டபடியே, துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்காக இயக்குநர் பிருத்வி ஆதித்யா, மற்றும் அவரது குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருக்கு சிறப்பாக ஒத்துழைத்த கதாநாயகன் ஆதி, கதாநாயகி அகன்ஷாசிங், கிருஷ்ணா குரூப், நாசர் சார், பிரகாஷ் ராஜ் சார், முனீஸ்காந்த், மைம் கோபி மற்றும் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
அறிமுக இயக்குநர்கள் எல்லோருமே கதை சொல்லும் விதத்திலும், அதை நேர்த்தியாக படமாக்குவதிலும் திறமையானவர்களாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதை திட்டமிட்டு, தரம் கெடாமல். அதே சமயத்தில் துரித நேரத்தில் முடிப்பது மட்டுமே, அந்த இயக்குநரின் முழுமையான திறமை ஆகும்.
அந்த வகையில் இயக்குநர் பிருத்வியை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் என்கிற முறையில் எனக்கு பெருமையே. படமாக்கிய சில பகுதிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம், ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு தடகள ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் எல்லோரையும் பாராட்டுவது மிகையாக தோன்றினாலும், அந்தப் பாராட்டுக்கு உரியவர்கள் இந்தப் படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆவார்கள்.
கூடுதலாக, இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதே எங்களுக்கு மிக, மிகப் பெருமையளிக்கும் விஷயமாகும்..” என்றார்.