நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் கேரள மாநில விநியோக உரிமை தொகையை குறைத்து மதிப்பிட்டு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கூறி வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவரான அண்ணா சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் விஜய்க்கு அண்ணா சரவணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது :
“தாங்கள் சமூக அக்கறையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செய்து வரும் பல நல்ல காரியங்கள் பாராட்டுக்குரியவை. குறிப்பாக சமீபத்தில் 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களை பாராட்டும்விதமாக நேரில் அழைத்து பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினீர்கள்.
அந்த நிகழ்ச்சியில் எதிர்கால வாக்காளர்களாகிய மாணவர்களிடம் தேர்தலில் வாக்களிக்க காசு வாங்க கூடாது என்று வேண்டுகோள் வைத்தபோது ஒரு அரசியல் இயக்கத்தின் பொறுப்பாளர் என்கிற முறையில் தங்களை நினைத்து பெருமை அடைந்தேன்.
அதே சமயம் தாங்கள் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் கேரள மாநில விநியோக உரிமை 7 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தங்களின் தயாரிப்பாளர் உண்மையை மறைத்து 4 கோடி ரூபாய் மட்டும் பெற்றதாக ஆவணங்கள் தயாரித்து இந்த தொகைக்கு மட்டுமே வரி செலுத்தியுள்ளதாக தெரிகிறது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 45 சதவீத அளவில் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அறிகிறேன்.
‘வாரிசு’ படத்தின் மொத்த வியாபாரம் 360 கோடி அளவில் இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், அதன் தயாரிப்பாளர் அரசுக்கு எவ்வளவு வரி செலுத்தினார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
வருமானம் ஈட்டுபவர்கள் செலுத்தும் வரிப் பணத்தில்தான் ஏழைகளுக்கு நலத் திட்டங்களை அரசுகளால் செயல்படுத்த முடியும் என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதான்.
எனவே சமூக அக்கறையோடு தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வரும் தாங்கள், தங்களின் தயாரிப்பாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி உரிய வரியை அவர்கள் செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.