full screen background image

‘கர்ணன்’ படத்தில் சர்ச்சையான பாடலின் தலைப்பு மாற்றப்பட்டது..!

‘கர்ணன்’ படத்தில் சர்ச்சையான பாடலின் தலைப்பு மாற்றப்பட்டது..!

நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கர்ணன்’.

வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து இந்த ‘பண்டாரத்தி’ என்னும் பெயர் ஒரு சாதியப் பெயர் என்றும், அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் அது களங்கப்படுத்துகிறது என்றும் பலவித கண்டனங்கள் எழுந்தன.

இதன் தொடர்ச்சியாக மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக 2 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த “பண்டாரத்தி’ என்ற பெயரை மாற்றாமல் ‘கர்ணன்’ படத்தை வெளியிடக் கூடாது. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்…” என்று தங்களது மனுவில் இரண்டு அபேட்சகர்களும் கேட்டிருந்தார்கள்.

நீதிமன்றம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி பதில் அனுப்பச் சொல்லியிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கும் முன்பேயே அந்த சர்ச்சைக்குரிய பெயரை மாற்றிவிட்டதாக படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

கர்ணன்’ திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும், மரியாதையும்தான் சினிமா என்னும் மாயக் கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். 

பண்டாரத்தி புராணமும்’ அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக… என் நிலத்தோடும், என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான ‘பண்டாரத்தி’களின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன்.

ஆனால், நம் சமூக அடுக்கு முறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவும், விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் ‘பண்டாரத்தி புராணம்’ பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும், வருத்தத்தையும், கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தி’யை ‘மஞ்சனத்தி’ என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டாலென்ன…? பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிடப் போகிறதா என்ன..?

இனி ஏம ராஜாவின் மாட விளக்காக மஞ்சனத்தி’ இருப்பாள். இனி ஏமன் கர்ணனை’ ஆட வைப்பதற்காக ‘மஞ்சனத்தி புராண’த்தை பாடுவான்; ‘கர்ணனும்’ ஆடுவான்.

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும்…

எப்போதும்… காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்…” என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

நல்ல முடிவுதான். அடுத்த மாதம் படம் வெளியாகும் சூழலில் பிரச்சினையை இழுத்துக் கொண்டே போவதற்குப் பதிலாக சமரசம் செய்து கொள்வதுதான் இப்போதைய நிலையில் எந்தவொரு திரைப்படத்திற்கும் நல்லது.

Our Score