ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இந்தப் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் அறிமுக விழா இன்று காலையில் சென்னையில் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் படத்தின் நாயகனான நடிகர் கார்த்தி பேசும்போது, “இவ்விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம்கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது.
அதேபோல், ஒரு படத்தை சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், அந்தப் படம் தோல்வியுறாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு இலக்கு உண்டு. அந்த நம்பிக்கையை இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் கொடுத்திருக்கின்றன.
ஒரு வரியிலேயே நான் ஒப்புக் கொண்ட கதைதான் இந்த சுல்தான் திரைப்படம். அதேபோல், இந்தக் கதையில் நான்தான் நடிக்க வேண்டும் என்று 2 வருடங்கள் பொறுமையாக காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் வெற்றி பெற்றால் பல மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்படும்.
ஒரு படத்திற்கு கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அதைவிட வில்லன் மிக, மிக முக்கியம். இப்படத்திற்கு வில்லன் சிறப்பாக அமைந்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை நடிகர் லால், ‘பாகுபலி’ கட்டப்பா மாதிரி. எந்தக் காட்சியாக இருந்தாலும், எந்தப் பாத்திரமாக இருந்தாலும் லால் திறமையாக செய்கிறார்.
யோகிபாபுவின் படங்களைப் பார்த்து ரசித்து சிரித்திருக்கிறேன். ஆனால், அவருடன் இப்படம் மூலம் முதன்முதலாக பணியாற்றும்போதுதான் அவர் மிகப் பெரிய புத்திசாலி என்று தெரிந்தது. அவருடன் ஒருமுறை போனில் பேசும்போது “நான் இப்ப கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன்…” என்றார். அவரிடம் ஒரு விளையாட்டு வீரர் ஒளிந்திருக்கிறார் என்று அப்போதுதான் தெரிந்தது. இப்படி பல திறமைகள் அவரிடம் உள்ளது.
நெப்போலியன் எங்களுடைய நண்பராகத்தான் இப்படத்தில் பணியாற்றினார். ராஷ்மிகா இதுவரை கண்ணால் மிரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக, வலிமையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பால் கறப்பது, சேற்றில் வேலை செய்வது, மாட்டு வண்டி ஓட்டுவது என்று அனைத்தையுமே எளிதாக செய்திருக்கிறார். அனைவருக்கும் இவரைப் பிடிக்கும். அதேபோல் அவர் புத்திசாலியும்கூட.
நடன இயக்குநரான ஷோபி சிறப்பாக நடனம் அமைத்திருந்தார். அண்ணன்கள் சிங்கம் புலி, பொன்வண்ணன், மாரிமுத்து இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அனைவரின் மனதிலும் பதிய வைக்கும்படியாக பாக்கியராஜ் கண்ணன் கதை அமைந்திருக்கிறார். அனைவரும் பாதுகாப்புடன் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து மகிழுங்கள்…” என்றார்.