பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘உறுமீன்’. இப்படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன், ஹீரோயினாக ரேஷ்மி மற்றும் மனோபாலா, அப்புக்குட்டி, காளி வெங்கட், சான்ட்ரா எமி, லுக்மேன்ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
படம் பற்றி பேசிய இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, “இதுவொரு விறுவிறுப்பான ஆக்சன், திரில்லர் படம். பச்சையையும், கருப்பையும் கலந்தால் சாம்பல் கலர் கிடைக்கும். காடுகளை குறிக்கும் நிறம் பச்சை. நகரத்தின் இன்னொரு முகத்தை சொல்வதற்கு கருப்பு குறியீடு. கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன..? அவற்றின் ஒரிஜினல் முகம் என்ன..? இதைத்தான் த்ரில்லர் கலந்து இந்த ‘உறுமீன்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
‘நேரம்’ படம் பண்ணின காலத்திலிருந்தே சிம்ஹா என்னோட ஃபிரண்ட். ‘ஜிகர்தண்டா’க்கு முன்னாடியே, இதை ஆரம்பிச்சிட்டோம். இந்தப் படத்திற்கு அப்புறம் சிம்ஹா இன்னும் பிஸியாகிடுவார். ‘மெட்ராஸ்’ல அன்புவாக நடிச்ச கலையரசன் மெயின் கேரக்டர் பண்றார். அவரையும் அடுத்த லெவலுக்கு அழைச்சுட்டு போகக் கூடிய படம் இது. ஹீரோயின் ரேஷ்மிமேனன். ‘இனிது இனிது’, ‘பர்மா’ படங்கள் பண்ணிருக்காங்க.
‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ எனும் பழமொழிதான் படத்தின் மையக் கரு. “வேகமாக ஓடி வேட்டையாடும் உயிரினம் சிறுத்தைன்னு நீங்க நினைச்சா தப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே வேகம் காட்டி வேட்டையாடுவது கொக்குதான்…” என்றார்.









