‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நந்ததாலா’, ‘முகமூடி’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களுக்கு பிறகு தன்னுடைய ஆறாவது படமாக மிஷ்கின் தற்போது இயக்கி வரும் படம் ‘பிசாசு’. இந்தப் படத்தை இயக்குனர் பாலாவின் B ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்து விட்டது.
இந்த படத்தை பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறும்போது, “நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு horror படம் இயக்க வேண்டும் என்று விருப்பம். ரசிகர்களை வெறுமென பயமுறுத்துவது மட்டுமே ‘horror’ படம் அல்ல என்பது என்னுடைய கருத்து. ‘பிசாசு’ பயமுறுத்தும் விஷயம் மட்டும் இல்லை.. மனதை வருடும் விஷயமும் கூடத்தான்.
இந்தப் படத்துக்கான முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற சிறிய பாத்திரங்களுக்குகூட நடித்தவர்களுக்கு நான்கு மாதம் பயிற்சிக் கொடுத்து நடிக்க வைத்துள்ளேன். இந்த படத்தில் மூத்த நடிகர் ராதா ரவி சார் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில், வித்தியாசமாக நடித்து உள்ளார்.
கதாநாயகனாக அறிமுகம் ஆகிறவர் நாகா.. முதல் படத்தில் அவர் காட்டும் உழைப்பும் ஆர்வமும் அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை கட்டாயம் கூறுகிறது.
கதாநாயகியாக அறிமுகம் ஆகிறவர் பிரயாகா. கேரளாவில் இருந்து வந்து இருக்கும் அவர் நடன கலைகளில் வல்லவர். 60 அடிக்கும் மேல் உயரமான இடத்திலிருந்து ஒரு இரவு முழுவதும் பிசாசாக பறந்து, பறந்து நடித்த காட்சி பிரமிப்பூட்டும்.
பிரபல ஒளிப்பதிவாளர் Wide Angle ரவிசங்கர் இந்த படம் மூலம் ரவிராய் என்ற பெயரில் மிகவும் வித்தியாசமான கோணங்களில் இந்த காட்சிகளை பிரமாதமாக படம் பிடித்து உள்ளார். Arrol Corelli என்ற புதிய இசையமைப்பாளரை இந்த படத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். எனக்கு வேண்டிய இசை, அல்லது நான் கேட்கும் இசை வரும்வரை எனக்காக உழைக்க தயாராக இருக்கிறான்.
இந்த ‘பிசாசு’ படத்தின் உயிர் நாடியே climax காட்சிதான். பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய டோனி இந்த காட்சியில் மிரட்டி இருக்கிறார். புதுமுகங்களை வைத்து படமெடுத்தாலும் பட்ஜெட் பெரியது. அந்த சுதந்திரத்தை எனக்களித்த எனது நண்பரும், தயாரிப்பாளருமான பாலாவுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்கிறார் மிஷ்கின்.














