full screen background image

நியூயார்க்கில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு தமிழ் ரத்னா விருது..!

நியூயார்க்கில்  இயக்குநர் பாரதிராஜாவுக்கு தமிழ் ரத்னா விருது..!

நியூயார்க் நகரில் அமெரிக்க தமிழ்ச் சங்கம் நடத்திய விழாவில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு உயரிய விருது வழங்கப்பட்டது.

தமிழ்ப் பட இயக்குனர்கள் ஒரு காலகட்டத்தில் வெளிநாடு சென்று படப்பிடிப்பு செய்தபோது, அதுவரையிலும் யாரும் பார்த்திராத தமிழகத்து கிராமங்களை தன்னுடைய திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாரதிராஜாதான்.

தன் சாதனைகளுக்காக மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ மற்றும் பல தேசிய விருதுகளை பெற்றவர். காதல் கதைகளையும், சமூக சிந்தனையுள்ள திரைப்படங்களையும் டைரக்ட் செய்து ‘இயக்குநர் இமயம்’ என்று பாராட்டப்பட்டு தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

காலத்தால் அழிக்க முடியாத தமிழ்ப் படங்களை தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியிருக்கும் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிற்கு அமெரிக்காவாழ் தமிழர்கள் தங்களது சார்பில் மிகப் பெரிய விருதினை வழங்கி கெளரவித்துள்ளார்கள்.

சென்ற தீபாவளி தினத்தன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற நியூயார்க் நகர தமிழ்ச் சங்க விழாவில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு விழாவில் ‘தமிழ் ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் நாஸ்சவ் கவுன்டி மேயரான எட்வர்ட் மங்கனோ, இயக்குநர் பாரதிராஜாவுக்கு இந்த விருதினை வழங்கினார். இந்த விழாவில் ‘பாரதிராஜா தமிழ்த் திரைப்பட உலகில் சகாப்தம் படைத்தவர்’ என்று புகழாரம் சூட்டப்பட்டது.

சென்னையில் இருந்து காணொளி மூலம் அமெரிக்க தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் பிரகாஷ் எம்.ஸ்வாமி, பாரதிராஜாவின் சாதனைகளை பாராட்டினர். அமெரிக்காவில் உள்ள மதுரை மருத்துவ கல்லுரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளான மருத்துவர் சுந்தர் செல்வராஜ் மற்றும் மருத்துவர் மதன் ராஜ் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வாழ்த்திப் பேசிய அமெரிக்க தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் வீராகுமார், “நியூஜெர்சி தமிழ்ச் சங்க வெள்ளி விழாவில் கலந்து கொள்ள வந்த இயக்குநர் பாரதிராஜா, நியூயார்க் வந்ததற்கான காரணம் அவர் ரசிகர்கள் மீது வைத்திருந்த பாசமே..” என்றார். சங்கத்தின் பொருளாளர் கோஷி ஊமன் இயக்குநர் பாரதிராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

விழாவில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் பாரதிராஜா, “சர்வதேச அளவில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. திருமணமாகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நல்ல பெயர் எடுப்பதைபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள்  உள்ளனர்..” என்றார். “தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் மூளை போற்றப்படும்..” என்றும், “உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பெரும் பதவி மற்றும் பொறுப்புகளை அலங்கரிக்க இதுவே காரணம்..” என்றார். மேலும் தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்த பாரதிராஜா, “என் தாயின் ஆதரவும், ஆசியும்தான் எனது வெற்றிக்குக் காரணம்..” என்றார்.

சங்கத்தின் செயலாளர் ஜெயா சுந்தரம் வரவேற்புரை வழங்க, துணைத் தலைவர் கலை சந்திரா நன்றி கூறினார்.

Our Score