full screen background image

“ஹீரோவுடன் சரக்கு; ஹீரோயினிடம் செல்போன்..!” – சிங்கம் புலி சொன்ன டெக்னிக்..!

“ஹீரோவுடன் சரக்கு; ஹீரோயினிடம் செல்போன்..!” – சிங்கம் புலி சொன்ன டெக்னிக்..!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை வெளியிட்டுள்ளது.

S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசும்போது, “இனி தொடர்ந்து ZEE5 ல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி சீரிஸ் வரும். அந்த வகையில் செருப்புகள் ஜாக்கிரதை முதல் புராஜக்ட். மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம்,

இந்த சீரிஸை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அரவிந்தன், ராஜேஷ் சூசை ராஜ் ஆகியோருக்கு நன்றி.

இந்த மாதிரி கதையில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றவுடன் உடனே ஓகே சொன்ன சிங்கம்புலி அண்ணாவுக்கு நன்றி. ஐந்தாம் வேதம் சீரிஸில் என்னை ரொம்பவும் இம்ரெஸ் செய்தவர் விவேக் ராஜகோபால், மிக எளிதாக நடிப்பால் நம்மை அவர் பக்கம் ஈர்த்து விடுகிறார்.  ஐரா அகர்வால் மொழி தெரியாமலே டப்பிங் பேசியுள்ளார், வாழ்த்துக்கள்!” என்றார்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசும்போது, “முன்னதாக மதில் எனும் ஓடிடி படைப்பைத் தயாரித்துள்ளோம், இப்போது செருப்புகள் ஜாக்கிரதை உருவாக ஆதரவாக இருந்த ZEE5 கௌசிக் நரசிம்மன், எங்களை நம்பி வந்த சிங்கம்புலி சார்,  அருமையான கதையைத் தந்த எழுச்சூர் அரவிந்தன், கதையைத் திரையில் உயிர்ப்பித்த ஒளிப்பதிவாளர் கங்காதரன்,  இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் அனைவருக்கும் நன்றிகள்!” என்றார்.

தொடர்ந்து ஒளிப்பதிவாளர் கங்காதரன்,  இசையமைப்பாளர்கள் எல்.வி.முத்து & கணேஷ், கதை வசனகர்த்தா எழுச்சூர் அரவிந்தன், ஐரா அகர்வால்  நடிகர் விவேக் ராஜகோபால் ஆகியோர் பேசினர்.

இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் பேசும்போது, “ZEE-5 கௌசிக் நரசிம்மன், தயாரிப்பாளர் சிங்காரவேலன் உள்ளிட்டோருக்கு நன்றி.  இந்த இருவரால்தான் நான் இயக்குநர் ஆனேன்.

சிங்கம் புலி, நடிக்க வந்தால் டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை. மிக மிக இனிமையான மனிதர். மிக அருமையாக நடித்துள்ளார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண், ஷூட்டிங்கில், எங்களைவிட அவர் நிறைய ரீல்ஸ் எடுத்துள்ளார். டார்லிங் விவேக், ஐந்தாம் வேதத்தில் அவர் நடிப்பு பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தக் கதை ஒகே ஆனவுடன் அவரைத்தான் அழைத்தேன்!” என்றார்.

நடிகர் சிங்கம்புலி பேசும்போது, “இந்த சீரிஸ் எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தன் பேசினாலே காமெடியாக இருக்கும் அவரிடம் ஏராளமான கதைகளும் உள்ளன. அவர் இன்னும் உயரம் தொட வேண்டும். தயாரிப்பாளர் இன்னும் அப்பாவியாக இருக்கிறார். 

‘படப்பிடிப்பு எளிதாக முடிந்தது’ என சொல்லக் கூடாது. ‘மேக்அப் போடவே ஆறு மணி நேரம் ஆச்சு. ஒரு நாளைக்கு ரெண்டு ஷாட்தான் எடுப்போம்…  அமெரிக்காவில் இருந்து கேமரா கொண்டு வந்தோம்’ என்றெல்லாம் பேச வேண்டும்.

நான் கருப்பன் படத்தில் நடிக்கும்போது, ஒளிப்பதிவாளர் கங்காதரன் அதில் கேமிரா அஸிஸ்டெண்ட்டாக இருந்தார். இதில் அவர் ஒளிப்பதிவாளர் எனும்பொது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதன்.

இதில் எனது மகனாக நடித்திருக்கிறார் விவேக் ராஜகோபால்.  மிகப்பெரிய திறமைசாலி. மிக நன்றாக நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது ஒரு நாள்  இரவு, ‘உங்க மகனா நடிக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்’ என்றார்.  மறுநாள் இது பற்றி நான் சொன்னபோது, ‘அப்படி நான் பேசவே இல்லையே’ என்றார். ஏன் என்றால் முந்தைய ராத்திரி நாங்க இருந்த நிலைமை அப்படி.

ஹீரோயின் ஐரா மிக அழகானவர் மிகத் திறமைசாலி. ஹீரோயின் நம்பர் வேணும்னா ஒரு ஐடியா பண்ணுவோம். ‘எங்க செல்போன் கேமரா நல்லா இல்லே… உங்க செல்போன் கேமராதான் பளிச்னு இருக்கு. எங்களை ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்க’னு சொல்வோம். அவங்களும் எடுத்து அனுப்புவாங்க. அதவச்ச நம்பர தெரிஞ்சுக்குவோம். இந்த ஹீரோயின்கிட்டயும் அப்படித்தான் வாங்கினேன். ‘ஏன் அடிக்கடி போன் பண்றீங்க’னு கேக்குற ஹீரோயின்கள் மத்தியில இந்த ஹீரோயின் அன்பா பேசுறாங்க!” என்றார்.

இயக்குநர் எம்.ராஜேஷ் பேசும்போது, “சிங்கம்புலி அண்ணாவுடன் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் வேலை பார்த்தேன், ஆனால் மாகாராஜா பார்த்து அவர் மீது பயமே வந்து விட்டது, அவரிடம் பேசிப் பழகிய பிறகு,  நம்ம அண்ணன் என்ற உணர்வு வந்தது. விவேக் ராஜகோபால் நன்றாக நடிக்கிறார். இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

மார்ச் 28-ம் தேதி ZEE-5 ஓடிடி தளத்தில், இந்த செருப்புகள் ஜாக்கிரதை சீரிஸ் ஒளிபரப்பாகிறது.

Our Score