2010-ம் ஆண்டு வெளியான ‘போர்க்களம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பண்டி சரோஜ்குமார்.
மிரட்டலான மேக்கிங் மூலம் முதல் படத்திலேயே ஒட்டு மொத்த கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்ததோடு, பத்திரிகையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். படத்தின் ஒவ்வொரு ஷாட்களும் பார்வையாளர்கள் கண் சிமிட்டாமல் பார்க்க கூடிய விதத்தில் இருந்ததோடு, விறுவிறுப்பான திரைக்கதையோடு மிகப்பெரிய ஆக்ஷன் படமாகவும் இருந்தது. அப்படத்தை பார்த்த பலர் இயக்குநர் பண்டி சரோஜ்குமார், மிகப் பெரிய இயக்குநராக உருவெடுப்பார் என்று பாராட்டினார்கள்.
இதற்கிடையே, இயக்குநர் பண்டி சரோஜ்குமாரின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு “கலை எனது, விலை உனது” என்ற கருத்தோடு டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியான ’மாங்கல்யம்’ என்ற திரைப்படத்தை இயக்கியதோடு, அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.
இயக்குநராக ஏற்கனவே பாராட்டு பெற்ற பண்டி சரோஜ்குமார், தற்போது நடிகராகவும் ரசிகர்களிடம் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, புதிய படம் ஒன்றை இயக்கி தயாரிப்பதோடு, அதில் நாயகனாகவும் நடிக்கிறார்.
‘பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்’ (BSK MAINSTREAM) என்ற நிறுவனம் சார்பில் பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படத்திற்கு ’பராக்ரமம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பண்டி சரோஜ்குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனாமிகா, கிரிட்டி, மோகன் சேனாபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
வி.எப்.எக்ஸ். பணிகளை அயேக்ரா ஸ்டுடியோஸ் மேற்கொள்ள, கலை இயக்குநராக கிரிட்டி முசி பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பு மற்றும் மிக்ஸிங் பணியை காளி எஸ்.ஆர்.அசோக் கவனிக்க, சசாங் வெண்ணெலகண்டி பாடல்கள் எழுதுகிறார். லைன் புரொடியூசராக பிரவீன் குதூரி பணியாற்ற, பத்திரிக்கை தொடர்பாளராக ஹஸ்வத் சரவணன் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக மனராஜு பணியாற்றுகிறார். புகைப்படக் கலைஞராக நவீன் கல்யாண் பணியாற்றுகிறார்.
“I ME MYSELF” என்ற டேக்லைன் கொண்ட ‘பராக்ரமம்’ படத்தின் தலைப்பை அசத்தலான டீசர் மூலம் பண்டி சரோஜ்குமார் அறிவித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் பண்டி சரோஜ்குமார் பேசும்போது, ”மதுரையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த துரைராஜா என்கின்ற இளைஞனின் வாழ்க்கையில் உள்ளூர் கிரிக்கெட், காதல், நாடக வாழ்க்கை மற்றும் அரசியல் ஆகியவை எப்படிப்பட்ட பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பது தான் இந்த படத்தின் முக்கிய கதையம்சம். இளைஞர்களை அனைத்துவிதத்திலும் எண்டர்டெயின் செய்யும்விதமாக மட்டுமின்றி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து பார்க்க கூடிய படமாகவும் இந்த ‘பராக்ரமம்’ இருக்கும்.
இந்தப் படத்தை இயக்கி, தயாரித்து, நாயகனாக நடிப்பதோடு, இசை மற்றும் படத் தொகுப்பு பணிகளையும் நானே செய்யப் போகிறேன். மேலும், என்னுடன் பல திறமையான புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்கள்..” என்றார்.
தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் பண்டி சரோஜ்குமார், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, அக்டோபர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து, 2024-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.









