CHINNASAMY CINE CREATIONS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சின்னசாமி மௌனகுரு தயாரித்துள்ள படம் ‘ராயர் பரம்பரை’.
இந்தப் படத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி, K.R.விஜயா, R.N.R.மனோகர், பாவா லஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் டி.ராம்நாத் இயக்கியிருக்கிறார்.
இப்படம் வரும் ஜூலை 7-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் பாடலாசிரியர் மோகன் ராஜா பேசும்போது, “முதலில் சின்னசாமி சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன், இயக்குநர் இரண்டு பாடலை எழுதினார். நான் கிருஷ்ணா சாருடன் இணைந்து பணிபுரிகிறேன். அவரின் கதை தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும், இசையமைப்பாளர் எனக்கு பெரும் ஒத்துழைப்பு தந்தார். இன்று மட்டுமில்லை ஆரம்பக் காலங்களிலிருந்தே எனக்கு உதவியாக இருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள்…” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இதுவொரு நல்ல படம் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம்.
இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள். ஆனால் இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள், யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர்தான் காரணம். இயக்குநர் கலைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு உள்ளது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.
லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசும்போது, “இந்தப் படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா எனக்கு நீண்ட நாள் நண்பன், அவரது முதல் படத்தில் அவருடன் நான் இணைந்து நடித்தேன், அப்போதே நல்ல பழக்கம். இடையில் அவரைப் பார்க்கவில்லை. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இன்று இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது, படம் சுந்தர்.சி சாரின் காமெடி படம் போல இருக்கிறது, கண்டிப்பாக வெற்றி பெறும்.
மனோபாலா சார் மறைவை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, நீங்கள் அனைவரும் உடலின் மீது அக்கறை கொண்டு நல்ல உணவை உட்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.
கதாநாயகி கிருத்திகா பேசும்போது, “இது எனக்கு முதல் படம். படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும்…” என்றார்.
இயக்குநர் ராம்நாத்.T பேசும்போது, “நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது. கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர். அவரது கண்ணில் ஒரு உயிர் உள்ளது.
இந்தப் படத்தை நான் உருவாக்க காரணம், நான் கண்ட ஒரு உண்மை சம்பவம். ஒரு சமுதாயக் கோபம் எனக்குள் உள்ளது. அதுதான் இந்தப் படம் உருவாக காரணம். கதாநாயகன் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார். இசையமைப்பாளருக்கு மீண்டும் இந்தப் படம் ஒரு அடையாளத்தை அளிக்கும். படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படம் பார்த்து விட்டு ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசும்போது, “மறைந்த நடிகர் மனோபாலாவிற்கு முதலில் என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் சிறிய படம் இல்லை. ஒரு நல்ல பெரிய படம். தயாரிப்பாளர் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். இந்தப் படம் ஜாதி, மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம். யாரையும் தாழ்த்தி பேசாத ஒரு நல்ல படம். படத்தில் பல காமெடி கட்சிகளை எடுத்து வைத்துள்ளார் இயக்குநர். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் மக்களிடம் கொண்டு போய் இதை நீங்கள்தான் சேர்க்க வேண்டும்…” என்றார்.
தயாரிப்பாளர் சின்னசாமி பேசும்போது, “நான் நடிக்க ஆசைப்பட்டு வந்தேன். ஆனால், என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால் 10 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தைத் தயாரித்து அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், நான் யாருக்கும் சமரசம் செய்யாமல் இந்த படத்திற்கு தேவையானதைச் செய்துள்ளேன். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். எங்களைப் போன்ற புது குழுவிற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்..” என்றார்.
நடிகர் கிருஷ்ணா பேசும்போது, “கொரோனா முடிந்தவுடனே நான் ஒப்பந்தமான படம் இதுதான். ஃபுல் ஹீயூமர் படம், நான் முன்பு இந்த மாதிரி பண்ணியதில்லை. இயக்குநரை நம்பித்தான் களம் இறங்கினேன். இயக்குநர் கேப்டன் என்றாலும் கப்பல் சின்னசாமி சார்தான். அவருக்கு நன்றி. எல்லா படத்திற்கும் உங்கள் ஆதரவு இருந்துள்ளது. அதே போல் இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நாயகி எல்லா ஜவுளிக் கடை போட்டோவிலும் இவர் படம்தான் இருக்கும், சிறந்த மாடலாக திகழ்ந்தவர். நன்றாக நடித்துள்ளார். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்…” என்றார்.














