நடிகர் விஜய்யின் 68-வது படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படம் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் 25-வது படமாகும்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார்.
‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் இணைகிறது.
#Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.
சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏ.ஜி.எஸ்., விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும்விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக #தளபதி68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள்.
நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த #தளபதி68 திரைப்படம், 2024-ம் ஆண்டு வெளியாகும்.










