சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டனின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ஜி&கே வாஹினி புரொடக்ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி தயாரித்துள்ளார். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபலமான எழுத்தாளர் ஆவார்.
இந்தப் படத்தில் டெல்லி கணேஷூம், மணிகண்டனும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்.ஜே.சிவசங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை ஆர்.வசந்தகுமார் கையாள, ரதன் மற்றும் பவன் இருவரும் இசையமைத்துள்ளனர். ராஜேஷ் ராமகிருஷ்ணன் படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் இயக்குநரான விஷால் வெங்கட் இப்படத்தின் இயக்குநர் குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கணங்களின் கோர்வையாக இப்படம் அமைந்துள்ளது.
பணியில் இருந்து ஓய்வை நோக்கித் தள்ளப்படும் ஒருவரின் வாழ்வில் வேலையில்லாத இளைஞர் ஒருவரை சந்தித்தவுடன் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘நரை எழுதும் சுயசரிதம்’ படத்தின் கதை.
பல்வேறு சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் விருதுகளை அள்ளிய இந்த ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரைப்படம், திரையுலகினர், ரசிகர்கள், விமர்சகர்கள் என்று பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.











