S.R.பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மெய்ப்பட செய்.’
இந்தப் படத்தில் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ‘ஆடுகளம்’ ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞானப்பிரகாசம் E.G.P., ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, விஜய கணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜூம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – R.வேல், இசை – பரணி, படத் தொகுப்பு – K.J.வெங்கட்ரமணன், கலை இயக்கம் – கிருஷ்ணமூர்த்தி, நடன இயக்கம் – தீனா, மக்கள் தொடர்பு – மணவை புவன், இணை தயாரிப்பு – S.ரவிச்சந்திரன், ஞான பிரகாசம் E.G.P., தயாரிப்பு – தமிழ் ராஜ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வேலன்.
படம் பற்றி இயக்குநர் வேலன் பேசும்போது, “உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து பரவ ஆரம்பித்து இன்று அனைத்து நாடுகளிலும், மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி கிடக்கிறது கொரொனா என்னும் கொடிய நோய்.
ஆனால் அதைவிட வேகமாக ஒரு மிகப் பெரிய கொடிய நோய் நாட்டில் அதிகரித்து வருகிறது, அதுதான் பாலியல் வன்கொடுமை. இந்த ஆழமான கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான் இந்த ‘மெய்ப்பட செய்.’
நமது தலைமுறை நன்றாக வாழ பணம், நகை, சொத்து எல்லாவற்றையும் சேர்த்து வைக்க நினைக்கும் நாம். நமது தலைமுறை நிம்மதியாக வாழ எதை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. தூரத்தில் யாரோ ஒருவருக்கு நடக்கும் சம்பவம் நாளை நம் வீட்டிலும் நடக்கலாம்.
அப்படி ஒரு கிராமத்தில் இருந்து நகர வாழ்க்கை பற்றிய அனுபவமே இல்லாத நான்கு நண்பர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ சென்னைக்கு வருகிறார்கள். இங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து வியக்கின்றனர்.
ஒன்றும் தெரியாமல் கிராமத்தில் வாழ்ந்த நாமளே இதை தட்டிக் கேட்க வேண்டும் என்று துடிக்கையில் இங்கே இருக்கும் யாருமே அதை கண்டுகொள்ளாமல் சுயநலமாக இருப்பது எதனால்..? அவர்களது சூழ்நிலை என்ன..? ஏன் தட்டி கேட்க மறுக்கிறார்கள்..? என்ற அவர்களது கேள்விகளுக்கு கிடைக்கும் விடைதான் இந்த ‘மெய்ப்பட செய்’ படம்..” என்றார் இயக்குநர் வேலன்.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.









