தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு வரும் 21-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தற்போதைய செயலாளர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும் இயக்குநர் ஜனநாதன் தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன.
இரண்டு அணிகளும் இதற்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த நிலையில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் ஜனநாதனின் வேட்பு மனுவையும், அமீரின் வேட்பு மனுவையும் தேர்தல் விதிமுறைகளை மீறிய காரணத்தால் தேர்தல் அலுவலர் தள்ளுபடி செய்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த ஜனநாதன் அணியினர் ஒட்டு மொத்தமாக தங்களது அணியினர், தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டு இந்தத் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதையொட்டி இயக்குநர் ஜனநாதன் அணியினர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் இயக்குநர்கள் ஜனநாதன், அமீர். சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், தயா செந்தில்குமார், ஜெகன்னாத், அஸ்லாம், நாகேந்திரன், ஜெகதீஷ், பாலமுரளிவர்மன், விருமாண்டி, திருமுருகன் ஆகிய இயக்குநர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.












