சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் நிதின் சத்யா.
சென்ற வருடம் தான் தயாரித்த ‘ஜருகண்டி’ படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத் – எ நிதின் சத்யா புரொடக்சன் ஹவுஸ்’ சார்பாக புதிய படமொன்றை பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா.
இந்தப் படத்தில் நடிகர் வைபவ் முதன்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத் தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த், கலை – ஆனந்த் மணி, சண்டை பயிற்சி – மிராக்கல் மைக்கேல்.
சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குநர் மோகன்ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய S.G.சார்லஸ் எழுதி, இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும்.
இப்படத்திற்காக பல நட்சத்திரங்கள் கை கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது. தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.










