இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அண்ணனுக்கு ஜே’.
இப்படத்தினை அறிமுக இயக்குநரான ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர்.
இந்தப் படத்தில் கதநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
.அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார். படத் தொகுப்பு – G.B.வெங்கடேஷ்.
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் தினேஷ் பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. என் கேரியரில் இந்தப் படம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்காக இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி மஹிமா அருமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அரோல் கரோலி 7 பாடல்களையும் நன்றாக கொடுத்துள்ளார். ராதாரவி ஸாருடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்…” என்றார்.
இயக்குநர் ராஜ்குமார் பேசும்போது, “முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இப்படத்திற்கு பக்கபலமாக என்னுடன் கூடவே இருந்துள்ளார். நடிகர் தினேஷுக்கு முழுக் கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். நடிகை மஹிமா மேக்கப்கூட போடாமல் நடித்திருக்கிறார். மயில்சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஒரு அரசியல் சட்டையர் படம். அரசியல் அமைப்பு நமது நாட்டில் எந்த லட்சணத்தில் உள்ளன. அரசியல் அமைப்புகளும், கட்சிகளும் நமது மக்களையும், தங்களது தொண்டர்களையும் எப்படி ஏமாற்றுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் அழுத்தம் திருத்தமாய் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறேன்….” என்றார்.
இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வெற்றி மாறன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மற்ற படங்களைவிட இந்த படத்தில் ஒரு புதுமையான முறையில் இசையமைத்துள்ளேன். 7 பாடல்களுள் ஒவ்வொருவிதமாக இருக்கும்..” என்றார்.
நாயகி மஹிமா நம்பியார் பேசும்போது, “வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குநரின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது. இந்தப் படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்தப் படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளேன். இதுவும் எனக்குப் பெரிய சந்தோஷத்தையும், பெருமையையும் கொடுத்திருக்கிறது..” என்றார்.
தயாரிப்பாளரும், இயக்குநருமான வெற்றி மாறன் பேசும்போது, “நடிகர் தினேஷ் இந்தப் படத்தில் தனது முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். இயக்குநர் ராஜ்குமார் நல்ல படத்தை தந்துள்ளார். அவர் பட்ட கஷ்டத்திற்கு உரிய பலனை இந்தப் படம் கொடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.
நடிகர் ராதாரவி பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ரொம்பத் தன்மையான மனிதராகவும், விவரம் தெரியாதவராகவும் இருக்கிறார். வெற்றி மாறனிடம் டப்பிங் கலைஞராக முன்பே சம்பளம் வாங்கியிருக்கிறேன். இந்தப் படத்தில் தயாரிப்பாளராக அவரிடமிருந்து சம்பளம் வாங்கியிருக்கிறேன். மேலும் வட சென்னை படத்தி் அவரது இயக்கத்திலேயே நடித்தும் வருகிறேன். இதுவும் எனக்கு பெருமையளிக்கிறது.
இப்போதெல்லாம் நடிகர்கள் சம்பளம் கேட்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அவரவர் தேவைக்காக சம்பளம் கேட்கிறார்கள். அது தவறு. அந்தப் படத்தில் அவர்கள் நடித்ததுக்கேற்பத்தான் சம்பளம் கேட்க வேண்டும். அதுதான் நியாயமும்கூட. இப்போது பல பேர் பெரிய வீடு கட்டணும். பெரிய கார் வேண்டும் என்று நினைத்து அதை மனதில் வைத்துத்தான் சம்பளம் கேட்கிறார்கள். அந்தப் படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறோம். எத்தனை காட்சிகளில் நடிக்கிறோம் என்பது பற்றியெல்லாம் யோசித்து சம்பளம் கேட்பதில்லை. இப்படி தயாரிப்பாளர்களை பயமுறுத்தி விரட்டிவிடக் கூடாது. அவர்கள் நன்றாக இருந்தால்தான் நடிகர்களும், தொழிலாளர்களும் நன்றாக இருக்க முடியும்..” என்றார்.














