‘8 தோட்டாக்கள்’ என்னும் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிவிட்டது.
‘8 தோட்டாக்கள்’ என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கூர்மையான திறன் படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள், வலுவான கதையம்சம் என பல சிறப்பம்சம்ங்கள் இந்த படத்தில் பொருந்தியுள்ளதுதான் அந்த ஏதிர்பார்ப்புகளுக்கு காரணம்.
‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளப்பாண்டியன் தயாரிக்கும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை, ‘பிக்பிரிண்ட் பிச்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’) இருவரும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா, ‘மைம்’ கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘அவம்’, ‘கிரகணம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனுபவம் கொண்ட கே.எஸ்.சுந்தரமூர்த்தி, இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீகணேஷ் படத்தினை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் போஸ்டரை நேற்று மாலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, “போலீஸ் கதைகள் எனக்கும் எப்பவும் பிடித்தமான ஒன்று. அந்த வகை படங்களுக்கு மட்டுமே நம் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். ‘8 தோட்டாக்கள்’ என்னும் இந்த படத்தின் வித்தியாசமான தலைப்பே ரசிகர்களை கவர்ந்து இழுக்க, இந்த படமும் அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.
துப்பாக்கியில் இருந்து சீறி பாயும் தோட்டா போல இந்த ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் அமைய வேண்டும். படக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…” என்றார் விஜய் சேதுபதி.