full screen background image

81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட ‘3.6.9.’ திரைப்படம்

81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட ‘3.6.9.’ திரைப்படம்

பி.ஜி.எஸ். புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘3.6.9.’  

இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார்.  வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். நடித்துள்ளார்.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மாரிஸ்வரன், இசை – கார்த்திக் ஹர்ஷா, படத் தொகுப்பு – ஆர்.கே.ஸ்ரீநாத், கலை இயக்கம் – ஸ்ரீமன் பாலாஜி, பத்திரிகை தொடர்பு – எம்.பி.ஆனந்த்.

உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்களில் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், ஒரேயொரு களத்தில் 24 கேமராக்கள், 150-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450 தொழில் நுட்ப கலைஞர்களை  கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட படக் குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் பாண்டியராஜன், இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தீனா, எழுத்தாளர் அஜயன் பாலா, லோக்கல் சரக்கு’ படத்தின் தயாரிப்பாளர் சாமிநாதன் ராஜேஷ், நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

கலைப்புலி தாணு இந்த படத்தின் இசைத் தட்டை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசும்போது, “இன்றைய இயக்குநர்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் சார்தான். அவர்தான் தனது படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பிரிவுகளையும் ஒரு இயக்குvர் கையாள வேண்டும் என்பதை முதன்முதலில் கொண்டு வந்தவர். அவருக்கு பின் வரும் இயக்குvர்கள் கதையுடன் வர வேண்டும் என்கிற நெருக்கடியையும் அவர் உருவாக்கினார். அதுதான் இன்றுவரை அது தொடர்கிறது..” என்று கூறினார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசும்போது, “நான் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்றுதான் ஒவ்வொரு படியாக கற்றுக் கொண்டு அதை நோக்கி வந்தேன். ஆனால் சில நேரங்களில் அதை விட்டு பாதை மாறும்விதமாக நான் செல்லும்போது தயாரிப்பாளர் பி.ஜி.எஸ்.தான் என்னை இழுத்து பிடித்து இதுதான் உனக்கு சரியான பாதை என்று என்னை வழி நடத்தினார். என்னை நம்பி இந்த படத்திற்கு நீதான் இசையமைக்கணும் என்று சொல்லி மிகப் பெரிய பொறுப்பை எனக்களித்தார்.

அது மட்டுமல்ல, இது போன்ற ஒரு சாதனை படத்திற்கு மிகுந்த அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர்களைதான் பெரும்பாலும் தேடுவார்கள். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து இயக்குநர் சிவ மாதவ்வும் ஒப்புக் கொண்டதற்கு அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று கூறினார்.

நடிகர் பிளாக் பாண்டி பேசும்போது, “இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக ரிகர்சல் செய்து கொண்டிருந்த சமயத்தில் மிகப் பெரிய அளவில் மழை பெய்து கொண்டிருந்தது. நாம் நினைத்தபடி படப்பிடிப்பு நடத்த  முடியுமா என எனக்கு சந்தேகம் வந்தது. ஆனால் இயக்குநர் மட்டும் பெரும் நம்பிக்கையுடன் இருந்தார்.

அதேபோல சாதனைப் படமாக இது எடுக்கப்பட இருப்பதால் எந்த ஒரு இடத்திலும் நம்மால் அதற்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். வசனத்தை மறந்து விட்டால்கூட அதனால் சாதனை தடைப்பட்டு விடும் என்றுகூட இயக்குநர் கூறியிருந்தார். அதனால் இந்த படம் குறித்த நினைப்பை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நடித்தேன்” என்றார்.

படத்தின் இயக்குநரான சிவ மாதவ் பேசும்போது, “கிட்டத்தட்ட ஒன்பது வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் சாத்தியமானது. இதை ஒரு சாதனைப் படமாக எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னபோது எந்த யோசனையும் செய்யாமல் உடனே ஒப்புக் கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இதை துவங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.

இந்தப் படத்திற்காக ஆடிசன் வைத்தபோது கிட்டத்தட்ட 500 பேர்கள்வரை வந்து சென்றனர். அதில் பல பேர், “இவர்கள் 81 நிமிடங்களில் ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களாம்.. இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..?” என்று எங்கள் காதுபடவே பேசிவிட்டு சென்றார்கள். ஆனால் இன்று நாங்கள் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டோம். அவநம்பிக்கையுடன் பேசியவர்கள் இதை வெளியே நின்று வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கதை மீது பாக்யராஜ் சார் மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவரை கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணம் என் அப்பாவிற்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அதனால் இதில் அவர்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய பின்னர் நானும் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவராக உணர்ந்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன.

விஞ்ஞானத்தின் வளர்ச்சிதான் மனிதனின் வளர்ச்சி.. எல்லாவற்றிலும் விஞ்ஞானம் இருக்கிறது. லாரியில் எலுமிச்சை கட்டுவதில்கூட அறிவியல் இருக்கிறது. அந்த விஞ்ஞானம் பற்றிதான் இந்தப் படம் பேசுகிறது..” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். பேசும்போது, “நான் தயாரித்த முதல் படம் எனக்கு பெரிய அளவில் பயன் தரவில்லை. அதன் பிறகுதான் ஒரு பெரிய படமாக, பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும்.. அந்தப் படம் அனைவரையும் பேச வைக்கும்விதமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த போதுதான் இப்படி ஒரு சாதனை படத்தை எடுக்கும் எண்ணம் உருவானது.

இயக்குநர் சிவ மாதவ்விடம் இதை சொன்னபோது சற்றும் தயங்காமல் ஒப்புக் கொண்டார். அதேசமயம் படம் ஆரம்பிக்கும் முன்பு அவர் என்னிடம் சொன்ன கதை படமாக எடுக்க துவங்கியபோது கொஞ்சம், கொஞ்சமாக மாறி இருந்தது. ஆனால் அதுவும் முதலில் சொன்னதைவிட நன்றாகவே இருந்தது.

81 நிமிடங்களில் எடுக்கும் படம்தானே.. குறைந்த பட்ஜெட்டில் எடுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே காலியானது. அந்த அளவிற்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது.

இந்தப் படத்தில் ரிகர்சளுக்காக கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பாக்கியராஜ் சார் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தக் கப்பலின் கேப்டன் சிவ மாதவ்தான் என்றாலும், இது பாக்யராஜ் சார் படம்தான் என்பதை உறுதியாக சொல்வேன்..” என்றார்.

Our Score