“உலகமே ஒரு நாடக மேடை; அதில் நாமெல்லாம் நடிகர்கள்..” என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல. “வாழ்க்கையே ஒரு பயணம்தான்” என்றார் கண்ணதாசன். ‘யாத்ரீகன்’ என்கிற படம் அப்படி ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வருகிறது.
இந்தப் படம் 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக் கதை. கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள்., நிகழ்வுகள் பற்றி பல கேள்விகள் அலையடிக்கின்றன. விடை தேடி அவனை அலைக்கழிக்கின்றன.
இப்படி தன் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடி பல இடங்களுக்கு பயணம் செய்கிறான் ஆதி. சில நேரங்களில் காலச் சூழலே அவனை பயணத்திற்கு இழுத்துச் செல்கிறது. அலைகிறான்; திரிகிறான்.. இதன் முடிவுதான் என்ன..?
ஆதியாக கிஷோர் நடித்திருக்கிறார். கதையைக் கேட்டு பிடித்துப்போய் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். கிஷோருடன் சாயாசிங், ‘டூரிங் டாக்கீஸ்’ சுனுலட்சுமி, ‘கடல்’ சரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு வி.வெங்கடேஷ். இவர் ஜீவாவின் மாணவர். ‘மூச்சு’ படத்துக்குப் பிறகு இது இவருக்கு 2 வது படம். இசை ஜி.ரங்கராஜ். சென்னையில் இசைப் பள்ளி நடத்தி வருகிற இவருக்கு கர்நாடக சங்கீத உலகத்தில் குறிப்பிட்ட இடம் உள்ளது. படத் தொகுப்பு வில்சி. கலை சாபு சீனு. இவர் சாபு சிரிலின் மாணவர். நாக் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பவர் சோமசேகர ரெட்டி, இவர் பழம்பெரும் தெலுங்கு தயாரிப்பாளர் நாகேஸ்வர ரெட்டியின் மகன். கதை திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர்.
இதற்கான படப்பிடிப்பு நேபாளம், காங்க்டாக், சிலிகுரி, டார்ஜிலிங், வாரணாசி, காலிம்பான் போன்ற இடங்களில் நடந்துள்ளது. “இன்னமும் ஆறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது” என்கிறார் இயக்குனர் ஜெயபால்.
நேபாளத்தில் ஒரு புத்த மடாலயத்துக்கு சென்று இது தொடர்பாக பேச விரும்பியபோது அதன் உள்ளே நுழைய வேண்டும் என்றால்கூட தலை மழித்து அவர்களுடைய உடையை அணிந்து வந்தால்தான் அனுமதி என்று கூறியுள்ளனர். கிஷோர் அதற்காகவே தன் தலையை மழித்துக் கொண்டு உள்ளே சென்று அவர்களை சந்தித்தாராம்.
‘புத்தம் சரணம் கச்சாமி’, ‘தம்மம் சரணம் கச்சாமி’, ‘சங்கம் சரணம் கச்சாமி’ இவற்றுக்குப் பொருள்கள் பலவாறு கூறப்பட்டாலும், அது நமது லெளகீக வாழ்க்கையில் எப்படிப் பரிணாமப்படுத்தப்பட வேண்டும் என்கிற உண்மையான விளக்கத்தை புத்த பிட்சுக்களிடம் கேட்டுப் பெற்றுள்ளனர்.
புத்த பூர்ணிமா தினத்தன்று படப்பிடிப்பு நடத்தி ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலத்தையும் பதிவு செய்து வந்துள்ளனர்.
”நாயகனின் கேள்விகளுக்கு விடை தேடும் இந்த ‘யாத்ரீகன்’ திரைப்படம் வெள்ளித்திரையில் ஒரு பயண அனுபவமாக இருக்கும். படத்தில் வரும் லொக்கேஷன்கள் பாத்திரங்களைப் போல மிளிரும்; பேச வைக்கும். இந்தப் படத்தின் கதை ரசிகர்களுக்கு, தங்கள் கதையாக உணர வைக்கும். நாயகன் ,அவன் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் சுவாரஸ்யத்தின் தோரணங்களாக ரசிக்க வைக்கும். பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கும். இவை பார்க்கும் ஒவ்வொருவரையும் கதையுடன் தொடர்புபடுத்தி மகிழவும், நெகிழவும் வைக்கும்…” என்கிறார் இயக்குநர் ஜெயபால் கந்தசாமி .
விரைவில் யாத்ரிகன் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.