இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் முனிவேலன் பேசும்போது, “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோள்களை வைக்கிறேன். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் கட்டாயம் படத்தின் புரமோசனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராத நடிகர்கள் மீது தடை விதிக்க வேண்டும். ஓடிடி வியாபாரத்தை ஒழுங்குபடுத்தி தர வேண்டும். மேலும் பைரசியை தடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நடிகை சுபப்பிரியா பேசும்போது, “ஒரு படத்தில் ஒரு நடிகை இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். இந்தப் படத்தில் 5 பேர் இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெண்களுக்கான பாதுகாப்பு, தங்கும் வசதி, சாப்பாடு என எல்லாவற்றிலும் எங்களை நல்லவிதமாக பார்த்துக் கொண்டனர்.
பாடலாசிரிசிரியர் ஜெகன் கவிராஜ் பேசும்போது, “அதிர்ஷ்டம் என்றாலே அது இஷ்டத்துக்கு வரும் என்பார்கள் அப்படி வந்த வாய்ப்புதான் இது. இளையராஜாவின் முதல் ராஜாவான கார்த்திக் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் ‘ராஜ வம்ச’த்தில் நானும் இணைந்துள்ளேன் என பெருமைப்படுகிறேன். பாடல் எழுதத் தெரிந்த ஒரு இயக்குநருடன் பணிபுரிந்ததில் சந்தோஷம்” என்றார்.
பாடலாசிரியர் அருண்பாரதி பேசும்போது, “இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாதான் பாடல் எழுத என்னை அழைத்தார். இந்த படத்தில் நட்டியின் ஃப்ளாஷ்பேக்கில் அண்ணன், தங்கச்சிக்காக ஒரு பாடலை எழுதியுள்ளேன். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். கிளைமாக்ஸ் உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும்விதமாக இருக்கும். இந்தப் படத்தில் வேறொருவிதமான திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குநர் ஹாரூண்..” என்றார்.
நடிகை சாஷ்வி பாலா பேசும்போது, “ஒரு படத்தின் பிரமோசனுக்கு அதில் நடித்த அனைவருமே கட்டாயம் வந்து கலந்து கொள்ள வேண்டும். இயக்குநர் ஹாரூண் எல்லா காட்சிகளையும் எனக்கு நடித்துக் காட்டினார். படத்தில் நட்டியுடன் நடிக்கும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்கிற ஆர்வத்தில் இருந்தேன். என்னை போன்ற இலங்கை தமிழ் கலைஞர்களுக்கு தமிழ் சினிமா தொடர்ந்து வாய்ப்புகள் தந்து ஆதரிக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.
நடிகர் நட்டி பேசும்போது, “எங்களுக்கு சம்பளத்துடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் இந்த ‘வெப்’ படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர். இயக்குநர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும்போதே அவர் வேலை தெரிந்தவர்தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன் வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம்தான் இந்த ‘வெப்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “நடிகர் நட்டி தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. கார்த்திக் ராஜா ஜீனியஸ் இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் சிறு வயதாக இருந்தபோதே நான் அவரிடம் ‘சின்னக் கவுண்டர்’ படத்தின் கதையை கூறியிருக்கிறேன். நான் இயக்கிய உறுதிமொழி படத்திற்கு டிரைலரை உருவாக்கும்போது அப்போது கார்த்திக் ராஜாவும், ‘திலீப்’ என்கிற பெயரில் இருந்த ஏ.ஆர்.ரகுமானும்தான் அதை செய்து கொடுத்தனர். அதன் பிறகு ‘பொன்னுமணி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்து கொடுத்தார்..” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “நடிகர் நட்டி இருக்கும் இடம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். அவருடன் நான் ‘பகாசுரன்’ என்கிற படத்தில் இணைந்து சில நாட்கள் நடித்தபோது, அவரது அற்புதமான குணத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன் . ஒழுக்க நெறி கொண்ட நடிகர் அவர்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “யாருக்கும் தெரியாத விஷயம் இந்தப் படத்தின் இயக்குநர் ஹாரூண் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். நட்டியை’ சமூகம்’ என்றுதான் நான் கூப்பிடுவேன். காரணம், அவரைப் பார்க்க செல்லும் போதெல்லாம் எப்போதும் நான்கு, ஐந்து நண்பர்கள் அவருடன் இருப்பார்கள். எல்லோரும் அவர் கஷ்டப்பட்ட காலத்தில் இருந்தே உடன் இருந்த நண்பர்கள். அப்படி பழைய நண்பர்களை அரவணைத்து செல்வது வெகு சிலர் மட்டுமே.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “நடிகர் நடிகைகள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் அது வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட வேலைகளை ரத்து செய்துவிட்டு அவர்கள் வருவதற்கு சிரமமாகக்கூட இருக்கலாம். அதனால் தங்கள் விழா பற்றி முறையான அறிவிப்பை முன் கூட்டியே படக் குழுவினர் அவர்களுக்கு தெரிவித்து விட்டால் அவர்களுக்கும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். படம் நல்ல படமாக இருந்தால் நிச்சயமாக இப்போது ஒதுங்கிப் போனவர்கள் எல்லாம், நாளையே சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல், ஓடிடி என்று வியாபாரம் பேச தேடி வருவார்கள்.
சினிமா தயாரிக்க வருபவர்கள் கனத்த இதயத்துடன்தான் வர வேண்டும் தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக உதவியாக இருக்குமே தவிர அவர்களின் வியாபார விஷயங்களில் நிச்சயமாக பொறுப்பெடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை படம் தோல்வி அடைந்தாலும் வருத்தப்படக்கூடாது. தவறுகளை எப்படி களைவது என அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அதை சரி செய்ய வேண்டும். நடிகர் நட்டி அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடிக்க இருக்கிறார். வரும் நாட்களில் அவர் உலக அளவில் பேசப்படுவார்..” என்று கூறினார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது, “நான் தமிழுக்கு அடிமை. ஹீரோயின்கள் அழகாக தமிழ் பேசியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நட்டியுடன் அவர் அறிமுகமான ‘நாளை’ உட்பட 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். இயக்குநர் மிஷ்கின் போல ஒரு சிலர்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநர் ஹாரூணும் ஒருவர்” என்றார்.