விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா ஆகியோரின் நடிப்பில் S.P. ஜனநாதன் இயக்கத்தில் யூ டிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படம் வரும் மே 15-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தில் தனது கதாப்பாத்திரத்தைப் பற்றி நடிகர் விஜய் சேதுபதி கூறும்பொழுது, “இந்தப் படத்தில் நான் ‘எமலிங்கம்’ என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் இது என்று நான் தைரியமாக சொல்வேன். எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் பார்த்திராத ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இது நிலைக்கும்.
படப்பிடிப்பின்போது என்னுடன் கூடவே இருந்த நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் எனக்குள் இன்னமும் அடங்கவே இல்லை.
இந்தக் கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி என்று எதையும் எடுக்கவில்லை. கதாப்பாத்திரத்தின் புதுமைக்காக சற்றே உடல் எடையை கூட்ட வேண்டியிருந்தது. உண்மையை சொல்லப் போனால் நடிப்பு என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்களையும், பின்புலத்தை முழுமையாக உணர்த்தல்தான்.
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தினை அடிப்படையாகக் கொண்டது.
நான், ஆர்யா, ஷாம், கார்த்திகா என்று படத்தில் நடித்த அனைவருக்குமே படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் இனிமையாக கழிந்தது.
படத்தில் யாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்று தெரியாது. ஜனநாதன் சாரின் கதையில் எங்களுக்கென்று ஒரு இடம் கிடைத்திருந்தது. அதில் நாங்கள் நன்றாக நடிக்கவும் இடம் வாய்ப்பிருந்தது. அதனை நாங்கள் அனைவருமே நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டோம்..” என்றார்.