ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட்-1 & பார்ட்-2’ டப்பிங் பணிகள் ஜனவரி 26 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. இதற்கான க்ளிம்ப்ஸை படக் குழு வெளியிட்டது.
தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பலராலும் எதிர்பார்க்கப்படும் படமான ‘விடுதலை பார்ட்-1 & விடுதலை பார்ட்-2’ படத்தினைத் தயாரித்து வருகிறது.
‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் மிக அதிக பொருட் செலவிலும் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்திருக்க, வேல்ராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை தேசிய விருது வென்ற இயக்குநரான வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.
படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி, இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தன் போர்ஷனுக்கான டப்பிங்கைத் தொடங்கியுள்ளார்.
படத்தின் இசை வெளியீடு, டிரெயிலர் வெளியீடு, பட வெளியீடு ஆகியவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமாம்.