Nimo Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.பாலு தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வேட்டையன்’.
இந்தப் படத்தில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் ‘ஸ்டன்’ சிவா நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நேகா நடிக்கவிருக்கிறார்.
மேலும், ரோபோ சங்கர், சார்லி, நந்தா சரவணன், அப்புக்குட்டி, சுப்ரமணி மற்றும் பலரும் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
‘முறை மாமன்’, ‘முறை மாப்பிள்ளை’, ‘மேட்டுக்குடி’, ‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘வி.ஐ.பி.’, ‘அழகர்சாமி’, ‘வம்பு சண்டை’, ‘தக திமி தா’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவரும், ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஹலோ’, ‘பிரியமானவளே’, ‘விவரமான ஆளு’, ‘வசீகரா’, ‘அன்பே வா’, ‘பசுபதி C/o ராசக்காபாளையம்’, ‘முரட்டுக் காளை’, ’காதலைத் தவிர வேறொன்றும் இல்லை’ ஆகிய படங்களை இயக்கியவருமான கே.செல்வபாரதி இந்தப் படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
‘பிரியமுடன்’, ‘இரணியன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’, ‘மதுரை வீரன்’, ‘பெருமாள்’, ‘துள்ளி விளையாடு’, ‘இங்க என்ன சொல்லுது’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வின்சென்ட் செல்வாதான் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கப் போகிறார்.
ஒளிப்பதிவு – வி.வெங்கடேஷ், படத் தொகுப்பு – ஆண்டனி, இசை – அச்சு ராஜாமணி, கலை இயக்கம் – சிவா, சண்டை இயக்கம் – ஸ்டன் சிவா, மக்கள் தொடர்பு – நிகில்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஸ்டன் சிவா மற்றும் இயக்குநர் வின்சென்ட் செல்வா, வசனகர்த்தா கே.செல்வபாரதி, மற்றும் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.