‘5 ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகி பின்னர் ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் சுசி கணேசன். பிறகு இந்தியில் தற்போது ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இவர் தன்னுடைய அடுத்த படத்தை வேலு நாச்சியாரின் வாழ்க்கையை கொண்டு உருவாக்குகிறார். இதனை அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த பதிவில், “தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டிய வீர மகாராணி வேலுநாச்சியாரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி வேலு நாச்சியார் அம்மையாரை நினைவு கூர்ந்து வாழ்த்தியது, படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்துள்ளது,
இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடு போரிட்டு, வென்ற முதலும், கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு, உலகமே கொண்டாட வைத்துவிடலாம்…” என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் வேலு நாச்சியார் கதாப்பாத்திரத்தில் முன்னணி கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.