நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா மற்றும் மலையாள நடிகரான பஹத் பாசிலின் அறிமுக நடிப்பில், மோகன்ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தை ’24 AM Studios’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான R.D.ராஜா தயாரித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் R.J.பாலாஜி, சினேகா, ரோபோ ஷங்கர், சதிஷ் மற்றும் விஜய் வசந்த் ஆகிய நடிகர்கள் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராம்ஜியின் ஒளிப்பதிவில், அனிருத்தின் இசையில், ரூபனின் படத் தொகுப்பில் இந்த ‘வேலைக்காரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட ‘குடிசை பகுதி’க்கான செட் அமைக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டனர்.
இந்தப் படத்தின் கலை இயக்குநரான முத்துராஜ் இந்த செட்டை உண்மையான குடிசை பகுதி போன்று பிரமிப்புடன் அமைத்ததன் மூலம், அனைவரையும் பெரிதும் கவர்ந்துவிட்டார்.
இது குறித்து கலை இயக்குநர் முத்துராஜ் பேசுகையில், “கதைப்படி இப்படத்தின் கதாநாயகனும், நண்பர்களும் இந்த ஏரியாவில் வாழ்பவர்கள் என்பதால் படத்தின் பெரும் பகுதி இந்த ஏரியாவில்தான் நடக்கின்றது.
தயாரிப்பாளர் R.D.ராஜாதான் ‘இந்த முழு எரியாவையே செட்டாக போட்டுவிடலாம்’ என்று யோசனை சொன்னார். இந்த செட்டிற்காக பத்து முதல் பதினைந்து குடிசை பகுதிகளை நேரில் சென்று பார்த்து, அங்கு வாழும் மக்களின் வாழ்வு முறையையும், அந்த இடங்களையும் நன்கு உள்வாங்கி, நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்த செட்டை உருவாக்கினோம்.
இந்த செட் முழுவதையும் அமைத்து முடிக்க சுமார் ஐம்பத்தைந்து நாட்கள் ஆனது. தினசரி கூலி வாங்கும் தொழிலாளிகள் மற்றும் எல்லா மதத்தை சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழும் ஒரு தத்ரூப ஏரியாவாக இந்த இடத்தை உருவாக்க வேண்டுமென்பது எங்கள் நோக்கமாக இருந்தது.
உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குணாதிசயமும் நோக்கமும் இருக்கும். மேலும் எதார்த்தத்தை கொண்டு வர முழு செட்டையுமே நெரிசல் மிகுந்த இடமாகவே வடிவமைத்தோம். நிஜ குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் ஆகியற்றை உபயோகித்து அந்த எரியாவின் இயல்பை கொண்டு வர முனைந்துள்ளோம்.
இந்த முழு செட்டையும் சுற்றி பாய்ந்து செல்லும்படியாக ஒரு கூவம் ஆற்றையும் உருவாக்கியுள்ளோம். இந்த செட்டின் மொத்த பரப்பளவு 7.5 ஏக்கராகும். இந்த செட்டில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.
தயாரிப்பாளர் R.D.ராஜாவின் ஆதரவாலும், ஒத்துழைப்பாலுமே இவ்வளவு பெரிய செட் சாத்தியமானது. இந்த படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலிற்கு நிச்சயம் கொண்டு போகும்.
இந்தப் படத்தில் இயக்குநர் மோகன்ராஜாவின் கதை மற்றும் எழுத்து மிக சிறப்பாக அமைந்துள்ளது. எங்கள் எல்லோரின் ஒட்டு மொத்த உழைப்பையும் பாராட்டி இப்படத்தை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்…” என்றார்.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.