சாய் ஸ்டூடியோ புரொடெக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘அண்ணாத்த குப்பத்துல வாத்யாரும் தலயும்’.
இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடித்திருக்கிறார்கள். சுபாஷ். பிரவீன், உதயன், டாக்டர் ராஜ்குமார் ஆகிய நால்வரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரமேஷ் என்பவர் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – கோவிந்த் முத்துச்சாமி, ஒளிக்குட்டி, இசை – ராஜேஷ் தேவராஜன், பாடல்கள் – வ.கருப்பன், சூர்யா, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – எஸ்.சூர்யா.
இது முழுக்க, முழுக்க வடசென்னை பகுதியில் நடைபெற்றும் கதை என்பதால் படப்பிடிப்பும், வட சென்னை பகுதிகளிலேயே நடைபெற்றுள்ளது.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.சூர்யா, “பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்த முகவரியற்ற அனாதை மக்கள் ஒன்றாக வசிக்கும் குப்பம்தான் படத்தின் கதைக் களன். அது ‘அனாதை குப்பம்’ என்றே அழைக்கப்படுகிறது.
படத்தின் நாயகனும் அங்கே வளர்பவர்தான். ஹீரோ நன்கு வளர்ந்த பிறகு தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம், “நாமதான் இப்பவே அண்ணன் தம்பிகளா உறவினர்கள்போல் ஒன்றாக இருக்கிறோமே..? பின்பு எதற்கு ‘அனாதை குப்பம்’ என்ற பெயர்..? பெயரை மாற்றி ‘அண்ணாத்த குப்பம்’ன்னு வைச்சுருவோம்..” என்று சொல்லி குப்பத்தின் பெயரையே மாற்றிவிடுகிறார்.
‘வாத்தியார்’ என்றழைக்கப்படும் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், ‘தல’ என்றழைக்கப்படும் அஜீத்தின் ரசிகர்களும் அதிகமாக இருக்கும் அந்தக் குப்பத்தில் இரு தரப்பினரும் சேர்ந்து செய்கின்ற நல்ல விஷயங்களும் அதற்கு வருகிற எதிர்ப்புகளும், அதையொட்டி நடக்கும் சில சுவாரஸ்யமான சம்பவங்களுமேதான் படத்தின் கதை.
எம்.ஜி.ஆர். மற்றும் அஜீத் ரசிகர்களை மனதில் வைத்து நகைச்சுவையாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் என்றே நம்புகிறோம். படத்தின் டீஸரும், டிரெயிலரும், பாடல்களும் மிக விரைவில் வெளியாகவிருக்கின்றன…” என்கிறார்.