R.K Digital Media நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.ராஜ்குமார் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘உத்ரா’.
இந்தப் படத்தில் விஸ்வா, விவாந்த், ரக்சா, ரோஷிணி, சினேகா நாயர் ஐந்து பேரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் கவுசல்யா, தவசி, மெர்சல் சீனி, அமர் செளத்ரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – சி.ராஜ்குமார், திரைக்கதை, இயக்கம் – நவீன் கிருஷ்ணா, ஒளிப்பதிவு – ஏ.ரமேஷ், படத் தொகுப்பு – அஹமத், இசை – சாய் வி.தேவ், வசனம் – டி.ஜெ.குமார், நடன இயக்கம் – ராதிகா, சண்டை இயக்கம் – கில்லி சேகர், ஒலி வடிவமைப்பு – ஐயப்பன், கிராபிக்ஸ் – ஜெ.ஜீ ஸ்டூடியோ.
படத்தின் இயக்குநரான நவீன் கிருஷ்ணா இதற்கு முன்பாக ‘உச்சக்கட்டம்’, ‘நெல்லை சந்திப்பு’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் நவீன் கிருஷ்ணா படத்தின் முழு கதையையுமே தயக்கமில்லாமல் சொல்கிறார்.
“வட்டப்பாறை என்கிற கிராமத்திற்கு தங்களது கல்லூரி புரொஜக்ட் வொர்க்குக்காக செல்கிறார்கள் மூன்று கல்லூரி ஜோடிகள்.
அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை. சந்தோஷம் இல்லை. ஏன் திருமணம் நடந்தே சில வருடங்கள் ஆகிறது. அப்படி அதை மீறி எந்தத் திருமணம் நடந்தாலும், அந்த புது கணவன், மனைவி இருவரும் அன்றிரவே ஒரு அரூபத்தால் கொலை செய்யப்பட்டு விடுவதாக ஊர்க்காரர்கள் கூறுகிறார்கள்.
இதை மூட நம்பிக்கை என கல்லூரி ஜோடிகள் நிரூபிக்க தங்களுக்குள் ஒரு ஜோடியை திருமணம் செய்வது போல் நாடகமாடுகிறார்கள். தங்களுக்கு எதுவும் நேரவில்லை என அந்த ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள்.
அதை நம்பிய கிராமத்து மக்கள் தங்கள் ஊர் ஜோடி ஒன்றுக்கு திருமணம் செய்து வைக்க,. அந்த புது கணவன், மனைவி ஜோடி அன்றிரவே ஒரு அரூபத்தால் கொலை செய்யப்படுகிறார்கள்.
கொலை செய்தது யார்.. யாருக்காக இந்தக் கொலை.. எதற்காக இந்தக் கொலை என்ற ஆராய்ச்சியில் கல்லூரி ஜோடிகள் இறங்குகிறார்கள்.
அது அந்த கிராமத்தில் ஒரு அம்மனின் பக்தையாக வாழ்ந்த உத்ரா என்ற பெண்ணின் சாபத்தால் என தெரிய வருகிறது. அந்த சாபத்தை நீக்க உத்ராவையும் அவள் காதலனையும் கொன்ற வில்லன் மாசியை அந்த ஊர் எல்லைக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் கல்லூரி ஜோடிகள்.
ஆனால் உத்ரா எந்த அம்மனுக்காக, தன் வாழ்க்கையை வாழ்ந்தாலோ, அந்த அம்மனே உத்ராவை அவள் ஒரு இறந்த ஆத்மா என்று சொல்லி தன் சன்னதிக்குள் அனுமதிக்க மறுக்கிறது. அதனால் அம்மனுக்கும், உத்ராவிற்கும் இடையில் பெரும் பாசப் போராட்டம் துவங்குகிறது.
அம்மன், ஆவி உருவமான தன் பக்தை உத்ராவை மாசியை கொல்ல அனுமதித்தாளா..? கல்லூரி ஜோடிகள் உதவியுடன் உத்ரா, மாசியை கொன்றாளா..? என்பதுதான் இந்த ‘உத்ரா’ திரைப்படத்தின் விறுவிறுப்பான கிளைமாக்ஸ்..!
படத்தினை இன்றைய தமிழ்ச் சினிமாவின் சூழலுக்கு ஏற்றவகையில் திகில், சஸ்பென்ஸ் கலந்து பேய்ப் படமாகவும் நினைக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம். படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார் இயக்குநர் நவீன் கிருஷ்ணா.